பண்டாரநாயக்கவைப் போன்று என்னையும் கொல்லாமல் கொல்கின்றனர்

90 0

நெல்சன் மண்டேலா 27 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த போதிலும், சிறையிலிருந்து விடுதலையானதன் பின்னர் ஜனாதிபதியானார்.

அதே போன்று எத்தகைய சவால்கள் ஏற்பட்டாலும், தேர்தலில் நிச்சயம் நான் வெற்றி பெறுவேன். பண்டாரநாயக்கவை கொலை செய்ததைப் போன்று இன்று என்னை கொல்லாமல் கொல்கின்றனர் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

கம்பஹாவில் 05 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சு.க. தொகுதி அமைப்பாளர்களுக்கு இடம்பெற்ற கருத்தரங்கொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாம் யாருக்கும் அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை. நெல்சன் மண்டேலா 27 ஆண்டுகள் சிறையிலடைக்கப்பட்டிருந்தார். சிறையிலிருந்து விடுதலையாகி நாட்டின் ஜனாதிபதியானார். எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்கவை கொலை செய்தனர். சிறிமாவோ பண்டாரநாயக்கவின் குடியுரிமையை நீக்கினர்.

என்னை கொல்லாமல் கொன்று கொண்டிருக்கின்றனர். என்னைப் பற்றி பேசுபவர்களின் பின்னணியில் வேறு குழுக்கள் உள்ளன.

அந்தக் குழுக்களாலேயே அனைத்தும் முகாமைத்துவம் செய்யப்படுகின்றன. இவை என்னுடனான தனிப்பட்ட முரண்பாடுகளால் இடம்பெறவில்லை.

மாறாக என்னுடையதும் , ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினதும் கொள்கை மற்றும் சர்வதேசத்துடனான தொடர்புகளாலேயே எனக்கு எதிரான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

ஜே.வி.பி.யினர் தமது தேர்தல் பிரசார கூட்டங்களின் , தமது உறுப்பினர்கள் பதவியேற்றதன் பின்னர் சம்பளம் பெற மாட்டார்கள் எனக் கூறுகின்றனர்.

முன்னைய காலங்களில் ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள் என அனைவரது சம்பளத்தையும் கட்சிக்கு பெற்றுக் கொள்வார்கள். அதற்கமைய கட்சியால் தீர்மானிக்கப்படும் தொகை அவர்களுக்கு சம்பளமாக வழங்கப்படும்.

இவ்வாறான நிபந்தனைகள் தேர்தலுக்கு முன்னர் உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

எனினும் தற்போது போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் அவற்றில் கையெழுத்திட மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய தேசிய கட்சிக்கும், ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையில் காணப்படும் முரண்பாடுகளால் டி.எஸ்.சேனாநாயக்கவின் காலத்தில் காணப்பட்ட ஐ.தே.க. தற்போது இரண்டாகப் பிளவடைந்துள்ளது.

கடந்த ஓரிரு வருடங்களுக்கு முன்னர் பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் வீரர்களைப் போன்று கூட்டங்களுக்குச் சென்று கொண்டிருந்தனர். ஆனால் இன்று அவ்வாறான நிலைமை இல்லை என்றார்.