உள்ளூராட்சிமன்ற தேர்தல் பிற்போடப்படும்

91 0

திட்டமிட்ட வகையில் உள்ளுராட்சிமன்ற சபைத் தேர்தலுக்கான வாக்கெடுப்பு எதிர்வரும் மார்ச் மாதம் 09 ஆம் திகதி இடம்பெறாது.

தேர்தலுக்கு அரசாங்கம் முழுமையாக தயார் இல்லை என்பதால் தேர்தல் பிற்போடப்படும். சுதந்திர மக்கள் கூட்டணியில் இருந்து சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன விலகிச் செயற்படுகிறார் என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

உள்ளுராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கு தயாராக உள்ளோம்.எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் தேர்தல் பிரசாரக் கூட்டங்களை நடத்த தீர்மானித்துள்ளோம்.

முதலாவது பிரசார கூட்டம் எதிர்வரும் 10 ஆம் திகதி சிலாபம்,பொல்காவெல ஆகிய பகுதிகளில் இடம்பெறவுள்ளது.

உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கான வாக்கெடுப்பை எதிர்வரும் மார்ச் மாதம் 09 ஆம் திகதி நடத்த தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இருப்பினும் திட்டமிட்ட வகையில் மார்ச் 09 ஆம் திகதி வாக்கெடுப்பு இடம்பெறாது.ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவும், ஐக்கிய தேசியக் கட்சியும் தேர்தலுக்கு தயார் இல்லை என்பதால் உள்ளுராட்சிமன்றத் தேர்தலை பிற்போடுவதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது.

சுதந்திர மக்கள் கூட்டணியில் இருந்துஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன விலகிச் செயற்படுகிறார்.

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கி தீர்ப்பிற்கு பின்னர் அவர் கூட்டணி விவகாரத்தில் ஈடுபாடுடன் செயற்படுவதில்லை.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவரை தவிர ஏனைய உறுப்பினர் கூட்டணியில் இணக்கமாக செயற்படுகிறார்கள். இடம்பெறவுள்ள உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் நிச்சயம் வெற்றிப் பெறுவோம்.

தாம் தேர்தலுக்கு தயார் இல்லை என்பதால் மக்களின் அடிப்படை உரிமையை கேள்விக்குள்ளாக்கும் அரசாங்கத்தின் செயற்பாடு வெறுக்கத்தக்கது என்றார்.