மட்டு கரடியனாற்றில் 16 மாடுகள் கடத்தல் ; மாட்டுகன்று எரிந்த நிலையில் மீட்பு

118 0

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள  காருமலை பிரதேச மாட்டுபட்டியில் இருந்த 47 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான 16 எருமை மாடுகளை கால்நடையாக கடத்தி சென்று விற்பனை செய்த இளைஞன் ஒருவரை நேற்று வெள்ளிக்கிழமை (27) கைது செய்ததுடன்  தோல் கம்பனியில்  எரிக்கப்பட்ட நிலையில் மாட்டுகன்றுகளை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 21ம் திகதி கன்றுதாச்சியான மாடுகள் உட்பட 16 மாடுகள் காணாமல் போனதைதொடர்ந்து அதனை தேடிய நிலையில் கரடியனாறு செங்கலடி பிரதான வீதியில் உள்ள வீடுகளில் அமைக்கப்பட்டிருந்த சிசிரி கமராக்களை சோதனையிட்டபொது மாடுகளை இருவர் கால்நடையாக கடத்திச் செல்லும் காணொளி பதிவாகியுள்ளதையடுத்து மாடுகடத்தும் குழுவைச் சேர்ந்த  கித்துள் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவரை கைது செய்தனர்.

 

இவ்வாறு கைது செய்தவரிடம் மேற்கொண்ட விசாரணையில்  கடத்திச் சென்ற மாடுகளை ஏறாவூர் தளவாயிலுள்ள தோல் பதனிடும் கம்பனியிடம் விற்பனை செய்துள்ளதாக தெரிவித்தார்.

இதனையடுத்து, பொலிஸார் அந்த கம்பனியை சுற்றிவளைத்த போது  கடத்தப்பட்ட மாடுகளை வெட்டி இறைச்சி விற்பனை செய்யப்பட்டுள்ளதுடன், வெட்டப்பட்ட கன்றுதாச்சி மாடுகளின் வயிற்றில் இருந்த கன்றுகள் அந்த பகுதி நிலத்தில் எரியூட்டப்பட்டு புதைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

தோல் கம்பனி உரிமையாளர் மற்றும் மாடுகடத்தலில் ஈடுபட்ட கித்துள் பிரதேசத்தைச் சேர்ந்த  இருவர் தலைமறைவாகியுள்ளதாகவும்  நீண்ட காலமமாக கரடியனாறு பகுதியில் மாடு மற்றும் ஆடு கடத்தலில்  குழு ஒன்று இயங்கிவந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதேவேளை, கரடியனாறு பிரதேசத்தில் நேற்று 8 மாடுகளை காணவில்லை என அதன் உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.