தமிழகத்தில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருள் மீதான தடை ரத்து

70 0

உணவு பாதுகாப்பு மற்றும் தரச்சட்டத்தின் கீழ் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு தடை விதித்து தமிழக உணவு பாதுகாப்பு ஆணையர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2006-ம் ஆண்டு இயற்றப்பட்ட உணவு பாதுகாப்பு, தரச்சட்டத்தின் கீழ் தமிழகத்தில், குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு தடை விதித்து உணவு பாதுகாப்பு துறை ஆணையர் கடந்த 2018-ம் ஆண்டு உத்தரவிட்டார். புகையிலை பொருட்களுக்கு தடை விதித்து ஆண்டுதோறும் அறிவிப்பாணையும் வெளியிடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், உணவு பாதுகாப்பு துறை ஆணையரின் உத்தரவை எதிர்த்து, கர்நாடகாவை சேர்ந்த தனியார் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதேபோல, உணவு பாதுகாப்பு துறை ஆணையரின் உத்தரவை மீறியதாக சில நிறுவனங்களுக்கு எதிராக அரியலூர் நீதிமன்றத்தில் குற்ற நடவடிக்கைகளும் தொடரப்பட்டன.

அரசின் இந்த அறிவிப்பாணை மற்றும் குற்ற நடவடிக்கைகளை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2018 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் வழக்குகள் தொடரப்பட்டன.

அதேபோல, தடையை மீறியதாக சேலத்தை சேர்ந்த ஒரு நிறுவனத்துக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட நோட்டீஸை தனி நீதிபதி ரத்து செய்தார். அந்த உத்தரவை எதிர்த்தும் உணவு பாதுகாப்பு துறை சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், கே.குமரேஷ்பாபு அமர்வில் இந்த வழக்குகள் மீதான விசாரணை நேற்று நடந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்துள்ள தீர்ப்பில் கூறியிருப்பதாவது:

உணவு பொருட்கள் அல்ல: உணவு பாதுகாப்பு மற்றும் உணவு பொருட்களின் தரத்தை உறுதி செய்வதற்காக 2006-ல் கொண்டு வரப்பட்ட உணவு பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தில் (FSS)புகையிலை பொருட்கள், உணவுபொருட்களாக குறிப்பிடப்படவில்லை.

மாநில அரசுக்கு அரசியல் சாசனம் வழங்கிய அதிகாரத்தின்படி, உடலுக்கு தீங்கு விளைவிக்கும் போதை மாத்திரைகள், போதை பானங்களை பயன்படுத்த தடை விதிக்க முடியும்.

ஆனால், ‘குட்கா, பான் மசாலா போன்ற போதை தரும் புகையிலை பொருட்கள் உடல்நலனுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியது என்பதாலும், புற்றுநோய் பாதிப்பை தடுக்கும் விதமாகவும், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, உணவு பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தின்கீழ் இவற்றுக்கு தடை விதிக்க உணவு பாதுகாப்பு ஆணையருக்கு அதிகாரம் உள்ளது’ என்ற தமிழக அரசின் வாதம் ஏற்புடையது அல்ல.

ஏனென்றால், குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு கண்டிப்பாக தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கட்டாயப்படுத்தவில்லை.

சிகரெட் உள்ளிட்ட புகையிலைபொருட்களை விளம்பரப்படுத்துதல், வணிக ரீதியாக முறைப்படுத்துதல், தயாரிப்பு மற்றும் விநியோக தடைச் சட்டம் (COTPA) 2003-ல், புகையிலை பொருட்களை விளம்பரப்படுத்துவது, முறைப்படுத்துவது பற்றி மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் சட்ட வரையறை: புகையிலை பொருட்கள் மத்திய அரசின் சட்ட வரையறைக்குள்தான் வருகின்றன. இந்த சட்டத்தின் கீழ்புகையிலை பொருட்களுக்கு நிரந்தரமாக தடை விதிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு வழங்கப்படவில்லை. புகையிலை பொருட்களுக்கு தடை விதிக்க உணவு பாதுகாப்பு ஆணையருக்கு அதிகாரம் இல்லை என டெல்லி உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள தீர்ப்பை ஏற்கிறோம்.

குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு நிரந்தரமாக தடை விதிக்க இந்த 2 சட்டங்களிலும் வழிவகை செய்யப்படவில்லை.

ஆணையரின் அதிகாரம்: அவசர நிலை கருதியும், பொதுநலன் கருதியும் குட்கா, பான் மசாலாபோன்ற புகையிலை பொருட்களை அதிகபட்சமாக ஓராண்டு வரை தற்காலிகமாக தடை செய்யமட்டுமே உணவு பாதுகாப்பு சட்டத்தில், துறை ஆணையருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

எனவே, உணவு பாதுகாப்பு ஆணையர் தனது அதிகாரத்தைமீறி புகையிலை பொருட்களுக்கு தடை விதித்து பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. அதேபோல, அந்த அறிவிப்பாணையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட குற்ற நடவடிக்கைகளும் ரத்து செய்யப்படுகின்றன. இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.