தமிழக சட்டசபையில் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முதல்முறையாக பேச்சு!

96 0

தமிழக சட்டசபையில் மூன்றாவதுநாள் கூட்டம் இன்று நடைபெற்ற போது, விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முதல்முறையாக பேசியுள்ளார்.

இன்று (வியாழக்கிழமை) காலை சட்டப்பேரவை கூடியவுடன் திருப்பூரில் விளையாட்டு மைதானம் அமைப்பது குறித்து சட்டப்பேரவை உறுப்பினர் செல்வராஜின் கேள்விக்கு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்தார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முதல்முறையாக சட்டப்பேரவையில் பதிலளிக்க எழுந்தபோது திமுக உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் கைதட்டி ஆராவாரம் செய்து உற்சாகப்படுத்தினர்.

இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ‘அரசு கல்லூரியில் 8 ஏக்கர் பரப்பளவில் 18 கோடி ரூபாய் மதிப்பில் புதிய மாவட்ட விளையாட்டு வளாகம் அமைக்கப்பட்டு வருகின்றது. இதில், பார்வையாளர்கள் அமரும் வகையிலான திறந்தவெளி விளையாட்டு அரங்கம், உடற்பயிற்சி கூடம், 400 மீட்டர் தடகள ஓடு பாதை, கால்பந்து மைதானம், டென்னிஸ், கையுந்துப் பந்து, கூடைப்பந்து ஆகிய விளையாட்டுகளுக்கான ஆடுகள வசதிகள் உருவாக்கப்படும்.

அதேபோல், திறந்தவெளி மைதானத்திற்கான கட்டுமானப் பணிகள் பொதுப்பணித்துறையால் நவம்பர் 2021ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தற்போது 60 விழுக்காடு பணிகள் முடிவடைந்துள்ளது. ஏப்ரல் 2023ஆம் ஆண்டுக்குள் மற்றும் கைப்பந்து ஆடுகளப் பணிகள் முடிப்பதற்கான நடவடிக்கைகள் பார்வையாளர்கள் அமரக்கூடிய கேலரி, 400 மீ தடகள் பாதை, கால்பந்து மைதானம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’ என கூறினார்.