இலங்கை வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை!

296 0

2017ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு முன், பொலிஸாரால் மேற்கொள்ளப்படும் அத்துமீறல்களைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவைக்கு இலங்கை அரசாங்கம் வாக்குறுதி அளித்திருந்த போதும், அது நிறைவேற்றப்படவில்லை என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

அத்துடன், பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை இரத்து செய்வதற்கோ, காவலில் உள்ளவர்கள் சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுப்பது தொடர்பிலோ இலங்கை அரசாங்கம் தோல்வியடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், பாதுகாப்புத் துறையில் மாற்றம் செய்வதாக அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளதா என்பதனையும், கால மாறு நீதிப்பொறிமுறைமை உள்ளிட்ட ஏனைய விடயங்கள் தொடர்பிலான அரசாங்கத்தின் முனைப்பு குறித்தும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை உன்னிப்பாக கவனிக்க வேண்டுமென, மனித உரிமைக் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய வலய பணிப்பாளர் பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு வாக்குறுதி அளித்து 18 மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் இலங்கைத் தலைவர்கள் முக்கிய மனித உரிமை விடயங்களுக்கு தீர்வு காண முனைப்பு காட்டவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.