முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச வைத்தியசாலையில் சுமார் ஒரு மாத காலமாக மருந்து கலவையாளர் இல்லாமையால் மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகம்கொடுத்துள்ளனர்.
ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ப்பட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பல நூற்றுக்கணக்கான மக்கள் நாளாந்தம் ஒட்டுசுட்டான் பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக வருகின்றனர்.
முத்துஐயன்கட்டு உள்ளிட்ட தூர இடங்களில் இருந்தும் முச்சக்கர வண்டிகளுக்கு அதிக பணம் செலுத்தி மக்கள் வைத்தியசாலைக்கு வந்தும் மருந்துகளை பெற்றுக்கொள்ள முடியாது பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுப்பதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்
இன்றும் வைத்தியசாலைக்கு வருகைதந்த பல நோயாளர்கள் மருந்துகளை பெற்றுக்கொள்ளமுடியவில்லை எனவும் இதனால் தாம் பல்வேறு இன்னல்களுக்கு முகம்கொடுப்பதாகவும் எனவே தமக்கான தீர்வினை உடனடியாக பெற்றுத்தருமாறு ஊடகங்கள் ஊடாக கோரிக்கை விடுத்துள்ளனர்
இந்தவிடயம் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் மு.உமாசங்கர் அவர்களை தொடர்பு கொண்டு நாம் வினவியபோது,
முல்லைத்தீவு மாவட்டத்தில் 33 மருந்து கலவையாளர்கள் இருக்கவேண்டிய நிலையில் 21 பேர் மாத்திரமே இருப்பதாகவும், அதிலும் நான்கு பேர் விடுமுறையில் உள்ளமையினால் 17 பேர் மாத்திரமே கடமையில் உள்ளதாகவும், மூன்று வைத்தியசாலைகள் நிரந்தமாகவே மருந்து கலவையாளர் இல்லாமலேயே சேவை வழங்குவதாகவும், ஒட்டுசுட்டான் பிரதேச வைத்தியசாலையில் சேவையில் இருந்த மருந்து கலவையாளர் நீண்ட காலம் விடுமுறையில் உள்ளதாகவும், மாற்றீடு செய்யக்கூடிய அளவில் மருந்து கலவையாளர்கள் இல்லாமையினால் மாவட்ட வைத்தியசாலை மாவட்ட மருந்து வழங்கல் பிரிவு மற்றும் மூன்று ஆதார வைத்தியசாலை உள்ளடங்களாக மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளை இயக்க வேண்டிய நிலை காணப்படுவதாகவும் இதனாலேயே இவ்வாறான நிலை காணப்படுவதாகவும் தெரிவித்தார்.

