2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டம் நவம்பர் மாதம் சமர்பிக்கப்படும்

153 0

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட உரையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிதியமைச்சர் என்ற ரீதியில் எதிர்வரும் 14ஆம் திகதி சபையில் ஆற்றவுள்ளார்.வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் 7 நாட்களுக்கு இடம்பெறவுள்ளது.

வரவு செலவு திட்டத்தின்ன் மீதான வாக்கெடுப்பை எதிர்வரும் டிசெம்பர் மாதம் 08 ஆம் திகதி வியாழக்கிழமை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று வியாழக்கிழமை பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழு கூட்டத்தின் போது இத்தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

எதிர்வரும் 8 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பாராளுமன்ற அமர்வு இடம்பெறுவதுடன்,09ஆம் திகதி நாட்டின் தற்போதைய நிலைவரம் தொடர்பில் சபை ஒத்திவைப்பு விவாதத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிதியமைச்சர் என்ற ரீதியில் எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி 2023 ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவு திட்டத்தை சபைக்கு சமர்ப்பிக்கவுள்ளார்.

வரவு செலவு திட்டம் தொடர்பான ஜனாதிபதியின் உரை (இரண்டாம் வாசிப்பு ஒதுக்கீட்டுச் சட்டமூலம்) 14ஆம் திகதி பிற்பகல் 01.30 இற்கு இடம்பெறவுள்ளது.

இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நவம்பர் மாதம் 15ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை இடம் பெறுவதுடன், இரண்டாம் வாசிப்பு மதிப்பீடு நவம்பர் மாதம் 22ஆம் திகதி இடம்பெறும்.

அத்துடன் குழுநிலை விவாதம் நவம்பர் மாதம் 23ஆம் திகதி புதன்கிழமை முதல் டிசெம்பர் மாதம் 06ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரை இடம் பெறுவதுடன் மூன்றாம் வாசிப்பு மதிப்பீடு எதிர்வரும் டிசெம்பர் மாதம் 08ஆம் திகதி இடம்பெறும்.