போப்பகேவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை -ராஜித்த சேனாரத்ன

462 0

ஊடக அமைச்சின் செயலாளருக்கு எதிரா சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென, அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித்த சேனாரத்ன, தெரிவித்தார்.  சுதந்திர ஊடக ஒழுங்குமுறை ஆணைக்குழு அமைப்பது தொடர்பில், ஊடகத்துறை அமைச்சின் செயலாளரான தனக்குத் தெரியாமல் ஆவணம் தயாரித்து, அதில் தனக்கு பதிலாக, அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் பணிப்பாளரே கைச்சாத்திட்டுள்ளார் என்று, அமைச்சின் செயலாளர் நிமல் போப்பகே ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில், அரசாங்கத் தகவல் நிலையத்தில் , நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் ஊடகவியலாளர் சந்திப்பின்போது, ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.   இதற்குப் பதிலளித்த அமைச்சர் ராஜித்த, செயலாளரின் குற்றச்சாட்டை மறுத்ததுடன், “அவர் இவ்வாறு தெரிவித்திருந்தால், அது தொடர்பில் எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

“ஒரு விடயம் தொடர்பில் அமைச்சர், செயலாளர் வேறுபட்ட கருத்துகளை தெரிவித்தாலும், அமைச்சர் சொல்வதே செல்லுபடியாகும். இந்த விடயத்தில், செயலாளரின் கையெழுத்து பெற்ற பின்னர் தான், ஆவணம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அவர் தனக்கு தெரியாது என்று சொன்னதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.