திருக்கோணேஸ்வரர் ஆலய வளர்ச்சிக்கு இந்தியா உதவ காத்துக்கொண்டிருக்கின்றது

135 0

எதிர்காலத்தில் திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலயத்தினுடைய வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் இந்திய அரசாங்கம் உதவுவதற்கு காத்துக் கொண்டிருக்கின்றது என இந்திய தூதுவர் கோபால் பாக்லே தெரிவித்தார்.

திருகோணமலை திருக்கோணேஸ்வர ஆலயத்திற்கு இன்று (02) விஜயம் செய்து பூசை வழிபாட்டில் கலந்து கொண்டதுடன் ஆலய நிர்வாக பணிகளையும் பார்வையிட்டார்.

இதனையடுத்து கோயில் நிர்வாகத்தினரையும் சந்தித்து கலந்துரையாடியதுடன் கோயில் நிர்வாகத்தினர் இந்திய தூதுவரை பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.

அதனையடுத்து ஊடகங்களுக்கு அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

இன்றைய தினம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திருக்கோணேஸ்வரர் ஆலயத்திற்கு நான் வருகை தந்திருக்கிறேன்.

இன்றைய நாள் ஒரு விசேட நாள் நவராத்திரி காலம் விரதம் அனுஷ்டிக்கப்படுகிற அதே காலத்தில் காந்தி ஜெயந்தி நடைபெறுகின்ற இன்றைய நாளில் இந்த இடத்துக்கு நான் விஜயம் செய்து பூஜை வழிபாடுகளிலும் மிக நேர்த்தியாக நான் கலந்து கொண்டது மாத்திரமில்ல இந்த ஆலயத்தினுடைய தொன்மையான வரலாறு பூர்வீகமான விடயங்கள் அனைத்தையும் அறிஞர்களும்,ஆலய நிர்வாகிகளும் எனக்கு நிறைந்த தெளிவுடன் எனக்கு அறிய தந்திருக்கின்றார்கள்.

எதிர்காலத்தில் இந்த ஆலயத்தினுடைய வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் இந்திய அரசாங்கம் உதவுவதற்கு காத்துக் கொண்டிருக்கிறது என்பதை மிகத் தாழ்மையாக தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த ஆலயம் ஒரு புனிதமானது மாத்திரமில்ல நாயன்மார்களால் பாடப்பட்ட ஒரு ஆலயம் என்பதை நான் அறிவேன் அந்த வகையில் இந்த ஆலயத்தினுடைய எதிர்காலம் நன்றாக அமைய வேண்டும்.

இங்கு ஒரு ராஜகோபுரம் அமைக்கப்பட இருக்கின்றதையும் ஆலய நிர்வாகிகள் எனக்கு தெரிவித்தார்கள் அந்த விடயம் தொடர்பாகவும் இந்திய அரசாங்கம் கவனம் செலுத்தும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். எனவும் அவர் தெரிவித்தார்.

இதன் போது    இலங்கை தமிழரசுக் கட்சியின் மாவட்ட தலைவர் சண்முகம் குகதாசன்,. இந்திய தூதரக அரசியல் துறை  ஆலோசகர் பானூ பிரகாஸ் மற்றும் இந்திய தூதுவரின் பாரியார். நிர்வாக உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.