யாழ் சிறையிலுள்ள இந்திய மீனவர்கள் உண்ணாவிரதம்

274 0

யாழ். சிறைச்சாலையில் விளக்கமறியலில் உள்ள 31 இந்திய மீனவர்களும் தம்மை விடுதலை செய்ய வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர்.

மேலும், கடற்படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது படகுகளை விடுவிக்குமாறும் இவர்கள் கோரியுள்ளனர்.

தமிழகத்தின் தங்கச்சிமடம், இராமேஸ்வரம், கோட்டைப்பட்டினம் பகுதிகளைச் சேர்ந்த 31 மீனவர்களே இன்று திங்கட்கிழமை முதல் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

கடந்த பல மாதங்களாக தாம் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், தமது குடும்பங்களை இழந்து பல சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் மீனவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

தமது விடுதலையினை வலியுறுத்தி முன்னெடுத்துள்ள இந்த உண்ணாவிரத போராட்டம் குறித்து மீனவர்கள் யாழ். சிறைச்சாலை அத்தியட்சகர் மற்றும் இந்திய துணைத்தூதுவருக்கும் மகஜர் மூலம் தெரியப்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.