அ.தி.மு.க. கட்சி விவகாரத்தில் பா.ஜ.க. தலையிடுவது சரியல்ல: திருநாவுக்கரசர்

215 0

தமிழகத்தில் அடித்தளம் இல்லாத நிலையில் அ.தி.மு.க. கட்சி விவகாரத்தில் பா.ஜ.க. தலையிடுவது சரியல்ல என்று திருநாவுக்கரசர் கூறினார்.

விருதுநகரில் காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இதில் கலந்து கொள்வதற்காக தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் நேற்று மதுரை வந்தார். அப்போது நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் அடித்தளம் இல்லாத நிலையில் ஆட்சியிலும், அ.தி.மு.க. கட்சி விவகாரத்திலும் பா.ஜ.க. தலையிடுவது சரியல்ல. அ.தி.மு.க. உள்கட்சி விவகாரத்தில் காங்கிரஸ் தலையிடாது. அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் மற்றும் முதல்-அமைச்சரை அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்களே முடிவு செய்ய வேண்டும். இதில் பெரும்பான்மை உள்ளவரை ஆட்சி அமைக்க அனுமதித்துவிட்டு பின்னர் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க அவகாசம் அளிக்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது.

வட மாநிலங்கள் சிலவற்றில் மத்திய அரசு ஆட்சியை கலைத்தது. பின்னர் நீதிமன்ற தலையீட்டால் மீண்டும் அந்த ஆட்சிகள் அமைக்கப்பட்டன. எனவே அரசியல் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு அ.தி.மு.க. ஆட்சி தொடர ஆளுநர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

விருதுநகரில் அவர் கூறும்போது, தமிழகத்தில் அசாதாரணமான சூழ்நிலை நிலவுகிறது. தமிழகத்தில் கடும் வறட்சி, விவசாயிகள் தற்கொலை என பல்வேறு பிரச்சினைகள் உள்ளது. அதனால் நிலையான அரசை அமர வைக்க ஆளுநர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். காலம் தாழ்த்துவதால் குதிரைப் பேரமும், சட்டம்-ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படும் வாய்ப்பு உருவாகிவிடும் என்றார்.