நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நிலைமை சீராகி மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கு காத்திரமான நடவடிக்கையினை மேற்கொள்வதே காலத்தின் தேவையாகும்.
அமைச்சு பொறுப்புக்களுக்கு அப்பால் நாம் கடின உழைப்பின் பக்கம் செல்ல வேண்டிய தருணம் எம் அனைவர் மீதும் உணரப்பட்டுள்ளது என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சருமான காதர் மஸ்தான் தெரிவித்தார்.
கொழும்பில் அமைந்துள்ள வர்த்தக மற்றும் உணவு காதுகாப்பு அமைச்சில் வெள்ளிக்கிழமை (9) தனது இராஜாங்க அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுக் கொண்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
தற்போது நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நிலைமை சீராகி மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கு காத்திரமான நடவடிக்கையினை மேற்கொள்வதே காலத்தின் தேவையாகும்.
அமைச்சு பொறுப்புக்களுக்கு அப்பால் நாம் கடின உழைப்பின் பக்கம் செல்ல வேண்டிய தருணம் எம் அனைவர் மீதும் உணரப்பட்டுள்ளது .
பொறுப்புக்கள் என்பது அதிகாரங்களுடனான சுகபோகங்களை அனுபவிப்பதற்கு அல்ல. மக்கள் பிரதிநிதி என்ற வகையில் எம்மீது சுமத்தப்பட்டுள்ள மக்களின் பிரச்சினைகளுக்கு இதயசுத்தியுடன் உழைக்கும் உன்னத பொறுப்பாகும். இதனை நாம் கடமை உணர்வுடன் செய்ய வேண்டிய தேவை இருக்கின்றது.
அமைச்சு பொறுப்புக்களையும் அதிகார சுகபோகங்களையும் விட்டுவிட்டு மக்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்துவதற்கு அனைவரும் இதயசுத்தியுடன் செயற்பட வேண்டுமென இந்த இடத்தில் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன் என்றார்.

