ஸ்ரீசு.க உறுப்பினர்கள் சுயலாபத்திற்காகவே அரசாங்கத்துடன் இணைந்துள்ளனர் !

109 0

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் கட்சியின் தீர்மானத்திற்கு முரணாக தங்களின் சுய இலாபத்திற்காக அரசாங்கத்தில் அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்டுள்ளனர்.

தேசிய மற்றும் சர்வதேசத்தின் வலியுறுத்தலுக்கமைய சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்கும் நோக்கம் அரசாங்கத்திற்கு கிடையாது என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் கட்சியின் அனுமதி இல்லாமலேயே அரசாங்கத்தில் அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சுக்களை பெற்றுக்கொண்டுள்ளனர்.

சர்வக்கட்சி அரசாங்கம் அல்லது சர்வக்கட்சி நிர்வாகம் தோற்றம் பெறுமாயின் அந்த அரசாங்கத்தில் அமைச்சு பதவிகயை ஏற்று,ஒத்துழைப்பு வழங்க மாத்திரமே கட்சி செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டது.

இவ்வாறான நிலையில் கட்சியின் தீர்மானத்திற்கு எதிராக சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் தங்களின் சுய இலாபத்திற்காக அரசாங்கத்துடன் ஒன்றிணைந்துள்ளமை கவலைக்குரியது.

தேசிய மற்றும் சர்வதேச தரப்பினரால் ஏற்றுக்கொள்ளும் வகையில் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண சகல அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்த இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிக்கும் யோசனையை ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி ஆரம்பத்தில் முன்வைத்தது.

சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுகின்றன நிலையில் அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களை கொண்டு அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சுக்கான நியமனங்களை வழங்கும் அரசாங்கத்தின் நிலைப்பாடு கவலைக்குரியதாகும்.

சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்கும் நோக்கம் அரசாங்கத்திற்கு கிடையாது.அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபிக்க வேண்டும் என தேசிய மற்றும் சர்வதேசத்தின் வலியுறுத்தலை அரசாங்கம் கவனத்திற் கொள்ளவில்லை.