மாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவிலில் நாளை நடை திறப்பு

264 0

மாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவிலில் நாளை நடை திறக்கப்படுகிறது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜைகள் மற்றும் ஒவ்வொரு மலையாள மாதத்தின் (தமிழ் மாதத்தின்) முதல் 5 நாட்கள் மற்றும் விஷு, ஓணம் பண்டிகை நாட்களிலும் நடை திறக்கப்பட்டு பூஜை, வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நாட்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள்.

இந்த நிலையில், மாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவிலில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.

அன்று சிறப்பு பூஜைகள் நடைபெறாது. மறுநாள் அதிகாலை 5 மணிக்கு மீண்டும் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். தந்திரி கண்டரு ராஜீவரரு முன்னிலையில், மேல்சாந்தி உண்ணி கிருஷ்ணன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து பூஜைகளை நிறைவேற்றுவார்.

தினமும் அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை உள்பட பூஜை, வழிபாடுகள் நடைபெறும்.

இந்த நாட்களில் தினமும் வழக்கமான பூஜைகளுடன், தந்திரி கண்டரு ராஜீவரரு தலைமையில் படிபூஜை, உதயாஸ்தமன பூஜை ஆகிய சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.

17-ந் தேதி அத்தாழ பூஜைக்கு பிறகு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு, இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படுகிறது.

நடை திறக்கப்படுவதையொட்டி, பக்தர்களின் வசதிக்காக திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம், ஆலப்புழை, எர்ணாகுளம் உள்பட மாவட்ட தலைநகரங்களில் இருந்து பம்பைக்கு கேரள போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.