சென்னை கடற்கரை சாலையில் நாளை காலை போக்குவரத்து மாற்றம்

203 0

சென்னை பெருநகர காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- 75-வது சுதந்திர தின விழா வருகிற 15-ந்தேதி சென்னை கோட்டையில் நடைபெறுவதை முன்னிட்டு வருகிற 6, 11 மற்றும் 13-ந்தேதிகளில் சுதந்திர தின விழாவின் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ஒத்திகை நடைபெறும் 6, 11 மற்றும் 13-ந்தேதிகளிலும், 15-ந்தேதி அன்று காலை 6 மணி முதல் ஒத்திகை முடியும் நேரம் வரை போக்குவரத்து கீழ்க்கண்ட வகைகளில் மாற்றம் செய்யப்பட உள்ளது. நேப்பியர் பாலம் முதல் போர் நினைவுச் சின்னம் வரை அமையப் பெற்றுள்ள காமராஜர் சாலை, போர் நினைவுச் சின்னத்தில் இருந்து இந்திய ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வடக்கு பகுதி வரை அமையப் பெற்றுள்ள ராஜாஜி சாலை மற்றும் கொடிமரச் சாலை ஆகிய சாலைகளில் அனைத்து வாகனங்களின் போக்குவரத்து தடை செய்யப்படும்.

காமராஜர் சாலையில் இருந்து ராஜாஜி சாலை வழியாக பாரிமுனையை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் சுவாமி சிவானந்தா சாலை, அண்ணா சாலை, முத்துசாமி பாலம், முத்துசாமி சாலை, ராஜா அண்ணாமலை மன்றம் மற்றும் வடக்கு கோட்டை பக்க சாலை வழியாக பாரிமுனையை வந்து அடையலாம். பாரிமுனையில் இருந்து ராஜாஜி சாலை வழியாக காமராஜர் சாலை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் வடக்கு கோட்டை பக்க சாலை ராஜா அண்ணாமலை மன்றம் சந்திப்பு, முத்துசாமி சாலை, முத்துசாமி பாலம், அண்ணா சாலை மற்றும் வாலாஜா சாலை வழியாக காமராஜர் சாலையை வந்தடையலாம்.

அண்ணா சாலையில் இருந்து கொடிமரச்சாலை வழியாக பாரிமுனை செல்லும் வாகனங்கள் முத்துசாமி சாலை, ராஜா அண்ணாமலை மன்றம் என்.எப்.எஸ். சாலை வழியாக பாரிமுனையை சென்றடையலாம். முத்துசாமி சாலையில் இருந்து கொடிமரச் சாலை வழியாக காமராஜர் சாலை செல்லும் வாகனங்கள் அண்ணா சாலை, வாலாஜா சாலை வழியாக காமராஜர் சாலையை சென்றடையலாம். வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பை நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.