மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள காத்தான்குடி மீராபாலிகா மகா வித்தியாலயத்தில் மாணவன் ஒருவனை தாக்கிய ஆசியரை எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா உத்தரவிட்டார்.
கடந்த முதலாம் திகதி காத்தான்குடி மீராபாலிகா மகா வித்தியாலயத்தில் 3 ஆம் தரத்தில் கல்வி கற்கும் ரி.ஸம்றி அகமட் எனும் மாணவனை வகுப்பாசிரியரான எஸ்.ரஸீட் என்பவர் பாடசாலையில் வைத்து தாக்கியதில் அம் மாணவன் காயங்களுக்குள்ளான நிலையில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றார்.
மாணவனை தாக்கிய குறித்த ஆசிரியரை காத்தான்குடி பொலிஸார் தேடி வந்த நிலையில் அவ்வாசிரியர் நேற்று திங்கட்கிழமை காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார்.
இவரிடம் விசாரணைகளை மேற் கொண்ட காத்தான்குடி பொலிஸார், நேற்று திங்கட்கிழமை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் நீதிபதி எம்.கணேசராஜா முன்னிலையில் ஆஜர்படுத்திய போது குறித்த ஆசிரியரை எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
தாக்கப்பட்ட மாணவனின் சார்பில் இதன் போது ஆஜரான சட்டத்தரணி எஸ்.எச்.எம்.றிஸ்வி, இம்மாணவன் தாக்கப்பட்டு காயங்களுக்காளான புகைப்படங்களையும் நீதிவானிடம் காண்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.