காங்கயம் பகுதியில் திடீர் நில அதிர்வு- பீதியால் இரவு முழுவதும் தூங்காமல் தவித்த பொதுமக்கள்

126 0

திருப்பூர் மாவட்டம் காங்கயம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று இரவு திடீரென்று நில அதிர்வு ஏற்பட்டது. காங்கயத்தை சுற்றி உள்ள கிராமங்களான சிவன்மலை, ஆலாம்பாடி, மருதுறை, முள்ளிபுரம், நால்ரோடு பகுதியில் இந்த நில அதிர்வு உணரப்பட்டது.

இந்த நில அதிர்வு சுமார் 10 நொடி நீடித்ததாக பொதுமக்கள் கூறினர். இதனால் வீட்டிற்குள் இருந்து பொதுமக்கள் வீதிக்கு ஓடி வந்தனர். வீட்டின் அலமாரியில் வைத்திருந்த பொருட்கள் கீழே விழுந்தன.

மொத்தத்தில் வீடு அங்கும், இங்கும் ஊஞ்சல் ஆடுவதுபோல் இருந்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர். சாலையில் தஞ்சம் அடைந்த பொதுமக்கள் மூலம் பக்கத்தில் உள்ள உறவினர்களை செல்போனில் தொடர்பு கொண்டு அங்கும் நில அதிர்வு ஏற்பட்டதா? என்று விசாரித்தனர்.’

நில அதிர்வின் காரணமாக ஏற்பட்ட பீதியால் இரவு முழுவதும் பொதுமக்கள் பலர் தூங்காமல் தவித்தனர். நில அதிர்வின்போது பெரிய சத்தம் ஒன்று கேட்டது. அப்போது வீட்டில் இருந்த பொருட்கள், பாத்திரங்கள், கட்டில், மேஜை ஆகியவை குலுங்கியது. இதனால் வீட்டில் இருந்தவர்கள் பீதியடைந்து அலறியடித்து வெளியே ஓடி வந்தோம். சிலர் சமையல் கியாசை ஆப் செய்யாமல் கூட வீட்டைவிட்டு வெளியே ஓடிவந்தார்கள். மீண்டும் நில அதிர்வு ஏற்படுமோ என்று பயந்து உள்ளோம். எது எப்படியே நில அதிர்வு லேசாக போய் விட்டது. நில அதிர்வு ஏற்பட்டதும் நாங்கள் ஒருகனம் அதிர்ச்சியடைந்துவிட்டோம் என்றனர்.