தகவல் வழங்கும் அலுவலகத்திற்குச் சென்ற பொது மக்களை பொலிஸார் தடுத்து வேறு ஒரு அலுவலகத்திற்கு அழைத்துச் சென்ற சம்பவம்(காணொளி)

288 0

தகவல் அறியும் உரிமைச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுவிட்டதாக அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டு இரண்டு நாட்கள் கடந்துள்ள போதிலும் அதற்கான அதிகாரிகளோ அல்லது ஆரம்பகட்ட நடவடிக்கைகளோ இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

தகவல் வழங்கும் அலுவலகத்திற்குச் சென்ற பொது மக்களை பொலிஸார் தடுத்து வேறு ஒரு அலுவலகத்திற்கு அழைத்துச் சென்ற சம்பவமும் இன்று இடம்பெற்றது.

கடந்த 2011ஆம் ஆண்டு கட்டுநாயக்கவில் சுதந்திர வர்த்தக வலய ஊழியர்களால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது அதனைக் கலைப்பதற்காக பொலிஸார் நடத்திய தாக்குதலில் ரொஷேன் சானக்க என்ற இளைஞன் பலியானதோடு நூற்றுக்கணக்கானோர் காயமடைந்திருந்தனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிகாலத்தில் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்பிக்கும்படி மஹனாம திலகரட்ண தலைமையில் ஆணைக்குழுவொன்று அமைக்கப்பட்டது.

எனினும் இந்த ஆணைக்குழுவின் அறிக்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ள போதிலும் இதுவரை அதிலுள்ள விடயங்கள் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில் அந்த அறிக்கையை வெளியிடும்படி ரொஷேன் சானக்கவின் தாயார் மற்றும் அருட்தந்தை சரத் இத்தமல்கொட ஆகியோர் கொழும்பு ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக உள்ள தகவல் வழங்கும் அலுவலகத்திற்குச் சென்றனர்.

இதன்போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அருட்தந்தை சரத் இத்தமல்கொட தகவல் வழங்கும் அதிகாரி ஒருவரை சந்திக்க இந்த இடத்தில் முடியவில்லை. மாறாக செயலாளர் ஒருவரையே சந்திக்க நேரிட்டதோடு விண்ணப்பப் படிவமும் கிடைக்கவில்லை. அத்துடன் விண்ணப்பப்படிவம் இல்லை என்றும், இன்னும் பயற்சி பெற்று வருகின்றோம் என்றும் குறித்த பெண் செயலாளர் கூறினார்” என்றும் தெரிவித்துள்ளார்.