பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 9 ஆர்ப்பாட்டக்கார்களில் 7 பேர் பொலிஸ் நிலையத்தில் சரண்

232 0

கொழும்பு – கோட்டை மற்றும் தலங்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த 6 மற்றும் 9 ஆம் திகதிகளில் இடம்பெற்ற வன்முறை தொடர்பில் போராட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் இன்று (22) காலை தமது சட்டத்தரணிகள் ஊடாக மருதானை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தனர். கடந்த 6 மற்றும் 9ஆம் திகதிகளில் கொழும்பு கோட்டை மற்றும் தலங்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இடம்பெற்ற வன்முறை தொடர்பில் சமூக செயற்பாட்டாளரான ரெட்டா எனப்படும் ரனிந்து சேனாரத்ன, அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் சம்மேளனத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட சந்தேகநபர்கள் 9 பேரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.

குறித்த சந்தேகநபர்களுள் லஹிரு வீரசேகர, ஜகத் மனுவர்ண, தம்மிக்க முனசிங்க, வண. ரத்கரவ்வே ஜினரதன தேரர், வண.கல்வெவ சிறிதம்ம தேரர், எரங்க குணசேகர, ஜெஹான் அப்புஹாமி ஆகியோரும் பெயரிடப்பட்டுள்ளனர்

பொலிஸ் நிலையத்தில் சரணடைவதற்காக காலி முகத்திடலில் இருந்து நடை பயணி பேரணியாக கோட்டை பொலிஸ் நிலையத்தை வந்தடைந்த அவர்கள், கொழும்பு உலக வர்த்தக நிலையத்திற்கு அருகில் வீதித் தடைகள் ஏற்படுத்தப்பட்டிருந்தமையினால் கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு செல்ல முடியாமல்போனது.

இதனையடுத்து, நடைபயணமாக அவர்கள் சென்று மருதானை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தனர். இதேவேளை, வண.கல்வெவ சிறிதம்ம தேரர் மற்றும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே ஆகிய இருவரையும் தவிர ஏனையோர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தமை குறிப்பிடத்தக்கது.