போதை பொருளுக்கு எதிரான போராட்டத்தை வீடுகளிலிருந்து தொடங்க வலியுறுத்தல்

260 0

இலங்கையில் போதைப் பொருள் பயன்பாடு சமூகத்தில் வேகமாக பரவி வருவதாக கூறியுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அதனால் ஏற்படுகின்ற அழிவுகள் யுத்தத்தை விட கூடுதலானது என்று தெரிவித்துள்ளார்.

புதன்கிழமை மட்டக்களப்பு – ஏறாவூரில் நடைபெற்ற போதைப் பொருள் ஓழிப்பு விழிப்புணர்வு நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது, இதனை அவர் குறிப்பிட்டுள்ளார்.

போதைப் பொருள், பாடசாலை மாணவர்கள் உட்பட சமூகத்தில் பல்வேறு வகைகளில் பரவி வருவதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ´´இதற்கு எதிரான போராட்டங்கள் வீதிகளில் ஆரம்பிப்பதை விட வீடுகளிலிருந்து தொடங்க வேண்டும்´´ என்றும் சுட்டிக்காட்டினார்.

´´மக்கள் ஏழ்மையிலும், வறுமையிலும் விடுபட வேண்டும் என்றால் மதுப் பாவனையிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும். அது போன்று மது மற்றும் போதைப் பாவனைகளை தவிர்த்து ஆரோக்கியமாக வாழ முன் வர வேண்டும்´´ என்றும் அவர் கூறினார்.

தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக எதிரணியினரால் முன்னெடுக்கப்படுகின்ற பிரச்சாரங்கள் தொடர்பாக தனது உரையில் குறிப்பிட்ட அவர், ´´அவர்களால் தற்போதைய அரசாங்கத்தை ஒரு போதும் வீழ்த்த முடியாது. நாட்டை பிரிக்கப் போவதாகவும் வெளிநாட்டு சக்திகளுக்கு அடிபணிந்து விட்டதாவும் அவர்களால் முன்னெடுக்கப்படும் பிரச்சாரங்கள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானது´´ என்று அவர் தெரிவித்தார்.