என்னை யாரும் புகழ்ந்து பேச வேண்டாம்: மு.க.ஸ்டாலின்

239 0

திருமண விழாக்களில் என்னை யாரும் புகழ்ந்து பேச வேண்டாம் என நடிகர் வாகை சந்திரசேகரின் மகள் திருமண விழாவில் மு.க.ஸ்டாலின் பேசினார்.

நடிகர் வாகை சந்திரசேகரின் மகள் திருமண விழா இன்று பழனியில் நடைபெற்றது. இவ்விழாவில் கலந்து கொண்டு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

இந்த திருமணத்தை சென்னையில் நடத்தாமல் பழனியில் நடத்தியதற்காக நான் வாகை சந்திரசேகருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஏனெனில் சென்னையில் நடத்தி இருந்தால் தி.மு.க. தலைவர் கருணாநிதி பங்கேற்க வேண்டி இருக்கும். அவருடைய உடல் நலத்தை கருத்தில் கொண்டுதான் சென்னையில் நடத்தாமல் பழனியில் அவர் நடத்தி இருக்கிறார்.

அட்சதை தூவி மணமக்களை தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்திய காட்சி.

இருந்தபோதும் தி.மு.க. தலைவர் கருணாநிதி அனுப்பி உள்ள வாழ்த்து கடிதத்தை அவரிடம் நான் வழங்கியுள்ளேன். திருமண விழாக்களில் என்னை புகழ்ந்து பேசுவதை நான் விரும்பவில்லை. அதனால்தான் மணமக்களை மட்டும் வாழ்த்தி பேசுமாறு தி.மு.க. நிர்வாகிகளிடம் கூறினேன். மணமக்கள் 16 வகை செல்வங்களையும் பெற்று நலமுடன் வாழ வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் நடிகர்கள் ராதாரவி, பிரபு, நெப்போலியன், சிவக்குமார், திண்டுக்கல் லியோனி உள்பட தி.மு.க. நிர்வாகிகள் எம்.எல்.ஏ.க்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விழாவில் நடிகர் ராதாரவி பேசும் போது, தற்போது நான் எந்த தலைமையையும் கொண்டவனாக இல்லை. விரைவில் நல்ல முடிவை அறிவிப்பேன். எனது சித்தப்பாவாக கருதும் தி.மு.க. தலைவர் கருணாநிதி விரைவில் உடல் நலம் பெற்று குணமடைவார். அவரை சந்தித்து எனது முடிவை தெரிவிப்பேன் என்று பேசினார். அப்போது கூட்டத்தில் இருந்த தி.மு.க. நிர்வாகிகள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.