நாமல் உள்ளிட்ட ஐவரின் வங்கிக் கணக்குகளை பரிசோதிக்க நீதிமன்றம் உத்தரவு!

240 0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த புதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட ஐவரின் வங்கிக் கணக்குகளை பரிசோதிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் நாமல் ராஜபக்ஷ ஹெலோ கோர்ப் எனும் நிறுவனமொன்றை கொள்வனவு செய்திருந்தார். இதற்காக நூறு மில்லியன் ரூபா கைமாற்றப்பட்டிருந்தது.

எனினும் முறையற்ற வகையில் சம்பாதித்த பணத்தைக் கொண்டே குறித்த நிறுவனத்தை அவர் கொள்வனவு செய்துள்ளதாக தற்போது குற்றம் சாட்டப்பட்டு வருகின்றது. இது தொடர்பாக பொலிஸ் நிதிமோசடிப் பிரிவினர் விசேட விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த விசாரணைகளுக்கு உதவும் வகையில் ஒன்பது வங்கிகளில் உள்ள பதினைந்து வங்கிக்கணக்குகளை பரிசோதிப்பதற்கான நீதிமன்ற அனுமதியைக்கோரி பொலிஸார் நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தனர்.

கொழும்பு மெஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குறித்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது நாமல் உள்ளிட்ட ஐவரின் வங்கிக் கணக்குகளை பரிசோதிப்பதற்கான அனுமதியை வழங்கி நீதிபதி அருண புத்ததாச உத்தரவிட்டுள்ளார்.