நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் அதிகளவில் மின் உற்பத்தி- பொறியியலாளர் சங்கம்

284 0

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் அதிகளவில் மின் உற்பத்தி செய்யப்படுவதாக இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

நீர் மின்சாரம் 11 வீதம் வரை வீழ்ச்சியடைந்திருப்பதாகவும், இதன் காரணமாக நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் அதிகளவில் மின் உற்பத்தி செய்யப்படுவதாகவும் இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

மொத்த மின் பயன்பாட்டில் 52 வீதமானவை நுரைச்சோலை அனல் மின் நிலையத்திலிருந்து வழங்கப்படுவதாக இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் அதுல வண்ணியாரச்சி குறிப்பிட்டுள்ளார்.

கடந்த தினங்களில் பெய்த மழை காரணமாக நீர் மின் உற்பத்தி செய்யும் நீர் தேக்கங்களின் நீர் மட்டங்களில் எவ்வித அதிகரிப்பும் ஏற்படவில்லை எனவும், மின் உற்பத்தி செய்யும் நீர் தேக்கங்களின் நீர் மட்டம் 33 வீதம் வரை குறைவடைந்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.நீர் மட்டம் 20 வீதம் வரை குறைவடைந்தால் நீர் மின் உற்பத்தி செய்வதில் நெருக்கடி நிலைக்கு முகங்கொடுக்க நேரிடும் எனவும், இதன்காரணமாக பெப்ரவரி மாதம் முதல் வாரமளவில் 60 மெகாவோல்ட் மின்சாரத்தை கொள்வனவு செய்ய வேண்டும் எனவும் அதுல வண்ணியாரச்சி குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ச்சியாக மின் உற்பத்தி செய்யும் நீர் தேக்கங்களுக்கு நீர் கிடைக்காவிட்டால் மார்ச் மாதம், மின் உற்பத்தியில் நெருக்கடி ஏற்படும் என்று இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் அதுல வண்ணியாரச்சி தெரிவித்துள்ளார்.