வவுனியாவில் உண்ணாவிரத்தில் ஈடுபட்டுள்ளவர்களின், உடல் நிலை மோசமடைந்து வருகின்றது(காணொளி)

287 0

வவுனியாவில் காணாமல் போனோரின் உறவினர்களால் மூன்றாவது நாளாகவும் தொடர்ச்சியாக உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் உண்ணாவிரத்தில் ஈடுபட்டுள்ளவர்களின், உடல் நிலை மோசமடைந்து வருவதாக வவுனியா பொது வைத்தியசாலையின் வைத்தியர் தெரிவித்தார்.

உண்ணாவிரதப் போராட்டம் இடம்பெற்ற இடத்திற்கு வருகை தந்த வைத்தியர் குழுவிலுள்ள வைத்தியர் ஒருவர், உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்களை பரிசோதனை செய்ததன் பின்னர் இவ்வாறு தெரிவித்தார்.

உண்ணாவிரதப் போராட்டத்தில் வயோதிப தாய்மார் இருவரின் உடலில் சீனியின் அளவு மிகக்குறைவடைந்துள்ளதாகவும், இருவரும் மயக்கமுறும் நிலையில் உள்ளதாகவும் குறித்த வைத்தியர் தெரிவித்தார்.

இந்நிலையில் மயக்கமுறும் சந்தர்ப்பத்தில் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்குமாறும், குறித்த வைத்தியர் அங்கிருந்த மக்களிடம் தெரிவித்தார்.

இதன்போது வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், உண்ணாவிரதிகளின் உடல்நிலை குறித்து வவுனியா வைத்தியசாலை வைத்தியரிடம் கேட்டறிந்து கொண்டார்.

இன்று மாலை மூன்று மனிக்கு வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பி.றோகணபுஸ்பகுமார உண்ணாவிரதிகளை நேரில் சந்தித்ததுடன், அவர்களுடைய நியாயங்களையும் கேட்டறிந்து கொண்டார்.

இதேவேளை உண்ணாவிரதப்போராட்டத்திற்கு இளைஞர்கள் சிலர் ஆதரவு வழங்கி வரும்நிலையில் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் அதிகளவில் பிரசன்னமாகியுள்ளனர்.

இந்நிலையில், உண்ணாவிரதம் இருப்போருக்கு ஆதரவாக வவுனியா முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கம் நாளை பேரணியொன்றினை நடாத்த திட்டமிட்டுள்ளது.

மூன்றாவது நாளாகவும் தொடரும் உண்ணாவிரதப்போராட்டத்தில் இன்றையதினம் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி, வட மாகாண போக்குவரத்து அமைச்சர் பா. டெனீஸ்வரன், வட மாகாண சபை உறுப்பினர்களான எம்.தியாகராசா, செ.மயூரன், கிறிஸ்தவ மத தலைவர்கள், வட மாகாண முதலமைச்சரின் பொதுசன தொடர்பாடல் உத்தியோகத்தர் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.