வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க. பெருவாரியான இடங்களில் வெற்றி பெறும் என நடிகை காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.
மதுரை மாநகர் மாவட்ட பா.ஜ.க. மகளிரணி சார்பில் உலக மகளிர் தினவிழா எஸ்.எஸ்.காலனியில் நடந்தது.
பா.ஜ.க. மாநில மகளிரணி தலைவி மீனாட்சி தலைமை தாங்கினார். இதில் பா.ஜ.க. கலை மற்றும் பண்பாட்டு பிரிவு மாநில தலைவியும், நடிகையுமான காயத்ரி ரகுராம் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழகத்தில் சமீபத்தில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க. ஆழமாக வேரூன்றி உள்ளது. பல இடங்களில் வெற்றி பெற்றதோடு ஏராளமான வார்டுகளில் 2-வது, 3-வது இடத்தை பிடித்துள்ளது.
இதேபோல வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க. பெருவாரியான இடங்களில் வெற்றி பெறும். தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு எதுவும் இல்லை.
தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் கற்பழிப்பு, கொள்ளை சம்பவங்களால் ஆண்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்றும் தெரிகிறது.
உக்ரைன் நாட்டில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை பத்திரமாக மீட்கும் பணியில் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் பா.ஜ.க. மாநகர் மாவட்டத்தலைவர் டாக்டர் சரவணன் மற்றும் மகளிரணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.