நாங்கள் இருந்த இடத்துக்கும், உக்ரைன் தலைநகர் கீவுக்கும் 800 கிலோமீட்டர் தொலைவாகும். அங்கு குண்டு மழைகள் பொழிந்த வண்ணம் இருந்தன. உடனடியாக சொந்த நாட்டிற்கு திரும்ப முடிவு செய்து விமான டிக்கெட்டுகள் எடுத்தோம்.
உக்ரைனில் நடந்து வரும் போர் காரணமாக அங்குள்ள தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் படிப்படியாக மீட்கப்பட்டனர். நேற்று தென்காசி மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்த ஜியாத், கன்ஷுல்லாஹ், அப்துல் அஜீம், ஆசாத், பயாஸ் ஆகியோர் பத்திரமாக சொந்த ஊருக்கு மீட்டு அழைத்து வரப்பட்டனர்.
நாங்கள் இருந்த இடத்துக்கும், உக்ரைன் தலைநகர் கீவுக்கும் 800 கிலோமீட்டர் தொலைவாகும். அங்கு குண்டு மழைகள் பொழிந்த வண்ணம் இருந்தன. உடனடியாக சொந்த நாட்டிற்கு திரும்ப முடிவு செய்து விமான டிக்கெட்டுகள் எடுத்தோம். ஆனால் புறப்பட முடியவில்லை. விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. நாங்கள் கல்லூரி அறையிலேயே உள்ள பதுங்கு குழிகளில் 4 நாட்கள் அடைபட்டுக் கிடந்தோம். அதன்பின்னர் மெட்ரோ ரெயில் நிலையங்களில் உள்ள பதுங்கு குழிகளில் தங்கி உயிரை காப்பாற்றி கொண்டோம்.
ஒரு நாள் உணவு ஒரு ஆப்பிள், ஒரு பிஸ்கட் பாக்கெட் வீதம் சாப்பிட்டோம். கார்கிவ் ரெயில் நிலையத்திற்கு சென்று நீண்ட வரிசையில் காத்திருந்து ரெயிலில் ஏற முயன்றபோது உக்ரைன் போலீசார் எங்களை ரெயிலில் ஏறவிடாமல் அடித்துத் துரத்தினர். பின்னர் போலீசாருக்கு தெரியாமல் கஷ்டப்பட்டு ஏறி 21 மணி நேரம் பயணம் மேற்கொண்டு ராக்கியோ என்ற இடத்திற்கு சென்று அங்கிருந்து பஸ் மூலம் ரொமானியா சென்றோம். அங்கே இந்திய தூதரக அதிகாரிகள் எங்களை அன்புடன் வரவேற்று இங்கு அனுப்பி வைத்தனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
முன்னதாக கடையநல்லூர் வருகை தந்த அனைத்து மாணவர்களையும் இனிப்புகள் வழங்கி சால்வை அணிவித்து கடையநல்லூர் நகர் மன்ற தலைவர் ஹபிபுர் ரஹ்மான் வரவேற்றார். அப்போது நகர்மன்ற துணைத்தலைவர் ராசையா, கவுன்சிலர்கள் முகமது அலி, முருகன், அரபா வஹாப் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், மாணவர்களின் பெற்றோர் உடனிருந்தனர்.

