விடுவிக்கப்பட்ட காணிகளை பகிர்ந்தளிக்கும் செயற்பாடு ஆரம்பம்

214 0

பல்லவராயன்கட்டுப் பகுதியில் வனவளத் திணைக்களத்தின் பிடியிலிருந்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் விடுவிக்கப்பட்ட காணிகளை பகிர்ந்தளிக்கும் செயற்பாடுகளை, அவரது இணைப்பாளர் வைத்தியநாதன் தவநாதன், இன்றைய தினம் (12) முன்னெடுத்தார்.

கடற்றொழில் அமைச்சரும், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவருமான டக்ளஸ் தேவாந்தாவின் முயற்சியால், வனவளத் திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் என்பவற்றின் பிடியிலிருக்கும் நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிகளை மக்கள் பாவனைக்கு விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, காணி அமைச்சரைப் பணித்திருந்தார்.

இதில், பூநகரி பிரதேச செயலக பிரிவுக்கு உடபட்ட பல்லவராயன்கட்டுப் பகுதியிலுள்ள சுமார் 100 ஏக்கர் காணியை, அந்தப் பகுதியில் உள்ள தகுதிவாய்ந்த மக்களுக்கு பிரித்தளிப்பதற்கான பதிவுகள், இன்றைய தினம் (12) மேற்கொள்ளப்பட்டது.

இந்தப் பதிவுகளின் அடிப்படையில்,பொருத்தமான பயனாளிகள் உரிய முறையில் தெரிவுசெய்யப்பட்டு, விரைவில்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவால் காணிகள் பொதுமக்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

மேலும், கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்குடபட்ட ஆனைவிழுந்தான் பகுதியில் உள்ள 300 ஏக்கர் காணியை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, விரைவில் அதுவும் அந்தப் பகுதி காணிகளற்ற மக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.