அட்டாளைச்சேனை கல்லூரியில் மீண்டும் கல்வி நடவடிக்கை

181 0

கொரோனா தனிமைப்படுத்தல் நிலையமாக செயற்பட்டு வந்த அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரி மீள கல்வி நடவடிக்கைகளுக்காக கையளிக்கப்பட்டுள்ளதாக, அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரியின் பீடாதிபதி கே. புண்ணியமூர்த்தி, இன்று (01)  தெரிவித்தார்.

நாட்டில் அதிகரித்து காணப்பட்ட கொரோனா தொற்றுக் காரணமாக, அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரி, 2020ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதி முதல் தனிமைப்படுத்தல் நிலையமாக செயற்பட்டு வந்தது.

தற்போது தேசிய கல்வியற் கல்லூரி வளாகம், கடந்த நவம்பர் மாதம் 22ஆம் திகதி இலங்கை இராணுவத்தினரால் மீளக் கையளிக்கப்பட்டுள்ளதாக, பீடாதிபதி தெரிவித்தார்.

இதனையடுத்து, கல்லூரியின் நிர்வாக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், கல்வியற் கல்லூரி இறுதியாண்டு பயிலுநர்களுக்கான கற்கை நெறிகள் பூர்த்தியடைந்துள்ளதாகவும், பயிலுநர்கள் பாடசாலைகளில் உள்ளக கற்பித்தல் பயிற்சிக்கு அனுமதிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கல்வியற் கல்லூரிக்கு இணைக்கப்பட்டுள்ள புதிய பயிலுநர்களுக்கான கற்பித்தல் செயற்பாடுகள் ஆரம்பிப்பது தொடர்பாக இதுவரை தீர்மானிக்கப்படவில்லையெனவும், கற்பித்தல் செயற்பாடுகள் ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடலின் பின்னரே தீர்மானிக்கப்படுமெனவும் பீடாதிபதி மேலும் தெரிவித்தார்.