இலங்கை அரசை நம்பி ஒப்படைத்த உறவுகளுக்கு நீதி வேண்டும்-யோ.கனகறஞ்சினி

359 0

இராணுவத்தினரையும், இலங்கை அரசையும் நம்பி ஒப்படைத்த உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற நீதியை கேட்டு தான் போராடி கொண்டிருக்கின்றோம் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் தலைவி யோகராசா கனகறஞ்சினி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
அரசாங்கத்தினால் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக ஒதுக்கப்பட்ட 300 மில்லியன் ரூபாவினை அரசாங்கம் எதற்கு பயன்படுத்த போகின்றது என்பதனை அரசாங்கம் தான் அதனை ஏற்று கொள்ள வேண்டும்.வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு இழப்பீட்டிற்காகவோ அல்லது வாழ்வாதாரத்தை கொடுப்பதற்காககோ அவர்கள் 300 மில்லியனை ஒதுக்கியிருப்பதாக கதைக்கின்றார்கள்.

ஆனால் யுத்தம் முடிவிற்கு வந்ததன் பிற்பாடு எங்களுடைய உறவுகளை இராணுவத்தினரையும், இலங்கை அரசையும் நம்பி ஒப்படைத்த உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற நீதியை கேட்டு தான் போராடி கொண்டிருக்கின்றோம். அதற்கான தேடலில் தான் நாங்கள் இருக்கின்றோம்.

உண்மையாகவே இந்த இழப்பீடு யாருக்கு வேண்டும். அதனை யார் ஏற்று கொள்ள போகின்றார்கள் என்றால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தினர் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

அதேநேரம் இச் சங்கத்தின் ஊடாக தங்களுடைய உறவுகளை தேடுகின்ற அத்தனை குடும்பங்களும் இழப்பீட்டையோ அல்லது மரண சான்றிதழையோ ஒருபோதும் ஏற்றுக்கொள்ள போவதில்லை என்பதனை ஏற்கனவே பல தடவை அரசுக்கு மட்டுமல்ல சர்வதேசத்திற்கும் நாங்கள் எடுத்துரைத்திருக்கின்றோம்.

அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட பல ஆணைக்குழுக்களை சந்திக்கின்ற போது கூட அவர்களுக்கும் இதனை தான் கூறியிருக்கின்றோம். இந்த இழப்பீட்டு தொகையை அரசாங்கம் எந்த நோக்கத்திற்காக இந்த தாய்மார்களுடைய தேடலை பயன்படுத்தி ஒதுக்கி வைத்தார்களோ எமக்கு தெரியாது.

ஒரு போதும் பாதிக்கப்பட்ட தரப்பிலே இருக்கின்ற கையளித்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் ஒருபோதும் இதனை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதனை கூறிக்கொள்கிறேன் என்றார்.