காரைநகர் – ஊர்காவற்றுறை பாதையில் பயணிப்போருக்கு பாதுகாப்பு அங்கி

171 0
யாழ்ப்பாணம், காரைநகர் – ஊர்காவற்றுறைக்கு இடையில் நடைபெறும் பாதை  சேவையில் பயணிப்போருக்கு, வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் பாதுகாப்பு அங்கிகளை வழங்கியுள்ளனர்.

காரைநகர் – ஊர்காவற்றுறைக்கு இடையில், வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் இலவசமாக பாதை சேவையை நீண்ட காலமாக நடத்தி வருகின்றனர்.

குறித்த பாதை சேவை ஊடாக உத்தியோகஸ்தர்கள் , ஊர்காவற்றுறை நீதிமன்றம் செல்வோர், மாணவர்கள் என பல தரப்பினரும் சென்று வருகின்றனர்.

சுமார் 500 மீற்றர் தூரமான இந்தப் பாதை சேவை நடைபெறாவிடின், இரண்டு ஊர்களுக்கும் இடையில் பயணிப்போர் யாழ்ப்பாணம் சென்றே செல்ல வேண்டும். அதற்காக அவர்கள் சுமார் 40 கிலோமீற்றர் தூரம் சுற்ற வேண்டிய நிலை ஏற்படும்.

இரண்டு ஊர்களுக்கு இடையிலும் நிரந்தர பாலம் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பதற்கு, சுமார் 1,700 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, செய்திகள் வெளியாகி இருந்த போதிலும், பாலம் அமைப்பதற்கான பணிகள் எவையும் ஆரம்பிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.