வவுனியாவில் இளவயதினருக்கு எயிட்ஸ் நோய்- வைத்தியர் சந்திரகுமார்

148 0

வவுனியாவில் கடந்த 18 வருடகாலப்பகுதியில் 29பேர் எயிட்ஸ் நோயாளிகளாக இனம்காணப்பட்டுள்ளதுடன் இள வயதினரே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு வேலைத்திட்டத்தின் பொறுப்பு வைத்திய அதிகாரி கு.சந்திரகுமார் தெரிவித்தார்.

எயிட்ஸ் நோய் தொடர்பாக இன்று (30) ஊடகவியலாளர்களிற்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்படி தெரிவித்தார்
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

உலக எயிட்ஸ் தினம் மார்கழி மாதம் 1 ம் திகதி உலகம் முழுவதும் கடைப்பிடிக்கபட்டு வருகின்றது. இம்முறை சமத்துவமின்மையை ஒழிப்போம், எயிட்ஸ்சை ஒழிப்போம், பெருந்தொற்றை ஒழிப்போம் எனும் தொனிப்பொருளில் உலக எயிட்ஸ் தினம் அனுஸ்டிக்கபட இருக்கின்றது.

இலங்கையில் இதுவரை 4142 எயிட்ஸ் நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர். எந்தவித தொற்று அறிகுறிகள் இன்றி நோய்தொற்றுடன் 3700 பேர் நடமாடி வருகின்றார்கள். வவுனியா மாவட்டத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டிலிருந்து இந்த ஆண்டின் காலாண்டுவரை 29 எயிட்ஸ் நோயாளிகள் இனம் காணப்பட்டுள்ளனர்.நடப்பாண்டில் இதுவரையான காலப்பகுதியில் ஒரு நோயாளி மாத்திரம் இனம் காணப்பட்டுள்ளார். அவர்களில் 16 பேர் ஆண்கள். அவர்களில் 12 பேர் மரணமடைந்துள்ளதுடன் வெளிநாடு சென்று விபச்சாரத்தில் ஈடுபட்ட ஒருவர் இந்தவருடம் வவுனியாவில் மரணத்தை தழுவியிருந்தார்.

ஏனைய நோயாளர்களிற்கான  சிகிச்சைகள் எம்மால் வழங்கபட்டு வருகிறது. அவர்களிற்கான மருந்துகளை நாம் வழங்கி வருகின்றோம். அந்த மருந்துகளின் மூலம் ஒருவரது மரணத்தினை தாமதப்படுத்த முடியும்.
எயிட்ஸ் நோய் பரவுவதற்கான மூன்று காரணங்களில் எச்ஐவி தொற்றுள்ள ஒருவருடன் பாலியல் ரீதியாக தொடர்பு கொள்ளல். நோய் தொற்றுள்ள ஒருவரின் குருதியை இன்னுமொருவருக்கு செலுத்துதல் மற்றும் ஒருபால் உறவு தொற்றுள்ள தாய் ஒருவருக்கு பிறக்கின்ற பிள்ளை ஆகியோருக்கு இந்த நோய் பரவுகிறது.
இலங்கையில் தற்போது குருதி மாற்றங்களின்போது உரிய பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றது.
அத்துடன் கர்ப்பிணி பெண்களிற்கு அவர்களது இணக்கத்துடன் எச்.ஐ.வி பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றது.

வவுனியாவை பொறுத்தவரை 15 வயது தொடக்கம் 35 வயதிற்குட்பட்டவர்களே தொற்றாளர்களாக இருக்கும் நிலை உள்ளது. இங்கு நோய்தொற்று ஏற்படுவதற்கு பிரதான காரணமாக விபசாரம் காணப்படுகின்றது. அத்துடன் 10ற்கும் மேற்ப்பட்டோர் நோய்த்தொற்றுடன் சமூகத்தில் நடமாடி வரும்நிலை காணப்படுகின்றது. வேறு மாவட்டங்களில் இருந்தும் விபசார தொழிலாளர்கள் இங்கு வருகை தருகின்றனர். எனவே எயிட்ஸ் நோய் தொடர்பாக இளைஞர்கள், இராணுவத்தினர், காவற்துறையினர், மாணவர்கள் ஆகியோருக்கு பல்வேறு  தெளிவுபடுத்தல்களை நாம் மேற்கொண்டு வருகிறோம்.
சாதாரணமாக குறித்த நோயை புதிய முறைகளின் அடிப்படையில் 10 நாட்களில் குருதியில் இனம்காணமுடியும்.  அந்த காலப்பகுதி என்பது எமக்கு மிகவும் கடினமானதாக இருக்கிறது. ஏனெனில் அந்த காலத்திற்குள் மீண்டும் பாதுகாப்பற்ற பாலியல் உறவில் ஈடுபடுவதால் பலருக்கு நோய்தொற்றும் சந்தர்ப்பம் அதிகமாக இருக்கிறது.

எச்.ஐ.வி வைரஸ் ஒருவருக்கு தொற்றினால் அது எயிட்ஸ் நோயாக மாறுவதற்கு 8 தொடக்கம் 10 வருடங்கள் எடுக்கிறது. நோய்தொற்று ஏற்பட்டவர் சாதாரண ஒரு மனிதரை போலவே இருப்பர். அவரது முகத்தை வைத்து நோயை கண்டுபிடிக்க இயலாது. குருதியினை பரிசோதனை செய்வதன் மூலம் மாத்திரமே அதனை கண்டுபிடிக்க முடியும். ஒரு தரமாவது பரிசோதனையை மேற்கொண்டால் குறித்த நோய் மற்றவர்களிற்கு தொற்றாமல் தடுக்கலாம்.
வவுனியா வைத்தியசாலையில் நோயாளர்களாக அனுமதிக்கபடும் சிலருக்கு எச்.ஐ.வி பரிசோதனை மேற்கொள்ளபடுகிறது. தாமாகவும் சிலர் வருகைதந்து பரிசோதனையை மேற்கொள்கின்றனர். எனினும் அது குறைவாக காணப்படுகின்றது. எனவே வவுனியா வைத்தியசாலையில் அமைந்துள்ள  பாலியல்நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு பிரிவில் பொதுமக்கள் தாமாகவந்து பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும். இங்கு பரிசோதனைகள் மேற்கொள்பவர்களது இரகசியங்கள் பாதுகாக்கப்படும். அத்துடன் சுயமாக வீட்டிலிருந்து பரிசோதனை செய்யும் முறைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.