யாழ்ப்பாணம், கோட்டையில் இடம்பெற்ற தேவாலயம் மீதான தாக்குதல் வேண்டுமென்று செய்யப்பட்ட விடயமல்ல எனத் தெரிவித்த நாவாந்துறை பங்குத்தந்தை அருட்தந்தை ஜேசுரட்ணம் அடிகளார், இந்த தேவாலயம் மீதான தாக்குதல் ஒரு மனநோயாளியால் மேற்கொள்ளப்பட்டது எனவும் கூறினார்.
இன்று (29) அதிகாலை, யாழ்ப்பாணம் – கோட்டைக்கு அருகிலுள்ள புனித அந்தோனியார் தேவாலய சொரூபங்கள் உடைக்கப்பட்டமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், குறித்த செயலை செய்தவர் ஏற்கெனவே தமக்கு அறிமுகமானவர் எனவும் அவர் ஒரு மனநோயாளி எனவும் கூறினார்.
நீண்ட காலமாக இந்த ஆலயத்திலேயே அவர் தங்கி வருகிறார் எனத் தெரிவித்த அவர், தாங்கள் பலமுறை அவரை வெளியேற்ற பார்த்ததாகவும் ஆனால் அவர் போகவில்லை எனவும், அருட்தந்தை தெரிவித்தார்.
இது வேண்டுமென்று செய்யப்பட்ட ஒரு விடயம் அல்ல, ஒரு மனநோயாளியால் மேற்கொள்ளப்பட்ட விடயமாகும் என்றார்.
“அவரை பொலிஸார் கைது செய்துள்ளார்கள். பின்னர் எனக்கு அறிவித்திருந்தார்கள். நான் பொலிஸ் நிலையத்துக்குச் சென்று முறைப்பாடு பதிவு செய்துள்ளேன். அதனுடைய தொடர்ச்சியான நடவடிக்கையை பொலிஸார் எடுப்பார்கள்.
“எனவே, இது தொடர்பில் பொதுமக்கள் குழப்பமடைய தேவையில்லை” எனவும், அவர் தெரிவித்தார்.

