புதிய அரசியல் அமைப்பு நாட்டை பிளவுப்படுத்தாது – ஜனாதிபதி

269 0

24836646501முன்மொழியப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பு நாட்டைத் பிளவுப்படுத்தும் ஆவணமல்லவென அஸ்கிரிய மகாநாயக்க தேரர் முன்னிலையில் ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

கண்டி தலதா மாளிகைக்கு நேற்று விஜயம் செய்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, அஸ்கிரி மகாநாயக்க தேரர் சங்கைக்குரிய வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரரை சந்தித்த போதே இதனை தெரிவித்துள்ளார்.

முன்மொழியப்பட்டுள்ள புதிய அரசியலமைப்புக்கு எதிராக சிலர் எத்தகைய கருத்துக்களை முன்வைத்தபோதும் அதில் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு அல்லது புத்த சாசனத்திற்கு பாதிப்பான எந்தவொரு அம்சமும் கிடையாது.

அத்தகையதொரு நடவடிக்கைக்கு தனது பதவிக்காலத்தில் இடமளிக்கப் போவதில்லை எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

புதிய அரசியலமைப்பைத் தயாரிக்கும் போது மக்களின் கருத்துக்களை கேட்டறிய அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் தொடர்பில், மக்கள் சரியான முறையில் அறிந்திருக்கவில்லை என இதன்போது மகாநாயக்க தேரர் ஜனாதிபதியிடம் தெரிவித்தார்.

எனவே, புதிய அரசியலமைப்பு தொடர்பாக பொது மக்களின் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளை முன்வைப்பதற்கு மீண்டும் சந்தர்ப்பத்தை பெற்றுக்கொடுப்பதாகவும் ஜனாதிபதி உறுதியளித்தார்.