மக்களின் பிரச்சனையை நேரடியாக மைத்திரிக்கு தெரிவிக்க புதிய அலுவலகம்!

264 0

fb_img_1482503364760-1பொது மக்கள் தமது முறைப்பாடுகளை நேரடியாகத் ஜனாதிபதியிடம் தெரிவிக்கும்  செயலகம் ஒன்று வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இயங்கவுள்ள நிலையில்  அவ் அலுவலகத்தின் ஆரம்ப கட்ட நிகழ்வுக்காக எதிர்வரும் நான்காம் திகதி ஜனாதிபதி யாழ் வரவுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே தெரிவித்துள்ளார்.

யாழ் ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,வடக்கிலே மக்களின் பிரச்சினைகள் உரிய அமைச்சுக்கள் ஊடாக தெரியப்படுத்துகின்றபோதிலும் அவற்றிற்கான பதில்கள் காலதாமதமாகவே மக்களைச் சென்றடைகின்றன. இதனால் ஜனாதிபதியின் நேரடிப் பிரதிநிதிகளின் மூலம் ஆரம்பிக்கப்படவுள்ள இந்தப்பிரிவின் மூலம் மக்கள் தமது பிரச்சினைகளை இந்த அலுவலகத்திற்கு வருகைதந்து எம்மிடம் தரமுடியும்.

அத்தோடு எதிர்வரும் நான்காம் திகதி யாழ். வரும் ஜனாதிபதியால் இவ் அலுவலகம் திறந்து வைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.மேலும் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் 1000 பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கல், மருத்துவத் தேவைகளுக்காக விண்ணப்பித்தவர்களுக்கு  உதவித்தொகை வழங்கல் மற்றும் கோட்டையை அண்டிய வளாகத்தில் மரங்கள் நாட்டல் போன்ற நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

எனவே மக்கள் தமது பிரச்சினைகளை வாரத்தில் ஒருமுறை குறித்த அலுவலகத்திலும் ஒருமுறை நேரடியாகவும் மற்றய நாட்களில் மனுக்கள் மூலமும் தெரிவிக்க முடியும். இதனால் மக்களின் பிரச்சினைகள் எம்மூடாக ஜனாதிபதிக்குத் தெரிவிக்கப்பட்டு தீர்வுகள் உடனடியாக பெற்றுத்தர வழிவகுக்கும்.

மேலும் சிவசேன அமைப்பினர் இந்தியாவுக்கான தல யாத்திரைகளை மேற்கொள்வதற்காக ஒரு பயண ஏற்பாட்டினை அமைத்துத்தருமாறு எம்மிடம் கோரியுள்ளனர். அதற்கான நடவடிக்கைளை நாம் இப்பொழுது முன்னெடுத்து வருகின்றோம் எனவும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.