மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தினரால் இன்று மாற்றுத்திறனாளிகள் தினம் நடாத்தப்பட்டது.
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக சமூக சேவைகள் பிரிவினரால் நடாத்தப்பட்ட மாற்றுத்திறனாளிகள் தினம் இன்று மட்டக்களப்பு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
குறித்த மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வில், ‘தடைகளே படிகளாக” எனும் மலர் வெளியீட்டு நிகழ்வும் நடைபெற்றது.
மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.தவராசா தலைமையில், பிரதேச செயலக டேபா மண்டபத்தில் இன்று நடைபெற்ற குறித்த நிகழ்விற்கு, பிரதம அதிதியாக மட்டக்களப்பு அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கலந்து கொண்டார்.
குறித்த நிகழ்வில், சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட மண்முனை வடக்கு பிரதேச செயலக உதவி பிரதேச செயலர் எஸ்.யோகராஜா, மட்டக்களப்பு மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் எஸ்.அருள்மொழி, கெமிட் நிகழ்ச்சித்திட்ட இயக்குனர் கே.காண்டீபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் தரிசனம், வாழ்வோசை, ஓசாணம், மென்கப், புகலிடம் ஆகிய நிறுவன மாணவர்களும், ஆசிரியர்களும் ,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை அனுஷ்டிக்கும் வகையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், மாணவர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

