அறத்தை மீறிய ஆயுதங்கள் !-அகரப்பாவலன்.

352 0

அறத்தை மீறிய ஆயுதங்கள் !

சிங்களமே !
மறப்போமா ?
மன்னிப்போமா ?… முடியாது !
அனைத்து பதிவுகளும்
நெஞ்சின் ஆழத்தில் பதிந்துள்ளது …!

உங்கள் குண்டுகள் பலியாக்கிய
எங்கள் உறவுகளின் மரித்த கண்களில்
அனைத்து பதிவுகளும் நிழலாடியது…!

உங்கள் பொஸ்பரஸ் குண்டுகள் எரித்த
வீரமறவர்களின் உடல்களில்
சிங்கள இனவெறியின் வரைபடம்
கீறப்பட்டிருந்தது …!

அறத்தை மீறிய ஆயுதங்கள்
ஆடிய சதிரை மறப்போமா ? – ஈழ
உரத்தை சிதைத்து உருக்கியே அழித்த
எரிதணல் வீச்சினை மறப்போமா …!

எத்தனை வகை கொடூர ஆயுதங்கள் …
எத்தனை வகை அறம் மீறிய செயல்கள் …

கிளஸ்டர் குண்டுகள் …!

ஒருதரம் வெடிக்கும்
வெடித்தது துகளாய் பரவும்
பரவியது மீண்டும் வெடிக்கும்
வெடித்தது சீறிப்பாய்ந்து
மக்களின் உயிரைக் காவுகொள்ளும் …

எறிகணைகள் …!

தூர எறிகணைகள் …
குறுந்தூர எறிகணைகள் …
பல்குழல் எறிகணைகள் …
சர்வதேச கொடையின் சிறப்பாக …

பல்குழல் எறிகணைகள்
ஒரு வீச்சில் நாற்பது குண்டுகளைக் கக்கும் … -அது
நல்லறம் அறுத்து தீயை எழுப்பி
கொல்லும் யமனாய் மாறும் …
மக்களின் மனதை அதிரவைத்து
எக்காளமிட்டு அழிக்கும் …

ஒரு கொடிய சம்பவம் …
ஒரு குறுந்தூர எறிகணை
ஓர் தாயின் காலில் புகுந்து
வெளிவராமல் மரணத்தின் உயிர்துடிப்பில்
துடி துடிக்க மரண வலியை காட்டியது …
அந்த தாயின் மனம் பட்டபாடு ………!

மிகையொலி எழுப்பிய விமானங்கள் …!

வானிலிருந்து குண்டுமழை பொழியும் …
நிலம் அதிர குண்டுகள் விழும் …
அவை …!
கூடாரங்களை அழிக்கும் …
மக்களைக் கொல்லும் …
கட்டிடங்களை தகர்க்கும் …
எஞ்சியவர்கள் மனதை சிதைக்கும் …

கடலில் திமிறிய சிங்களம் …!

நந்திக் கடலுக்கும் …பெருங்கடலுக்கும்
நடுவே முள்ளிவாய்க்கால் …
நந்திக்கடலில் இருந்து குண்டுமழை பொழியும் …
பெரும்கடலில் இருந்து
டோராக்கள் வேலியமைத்து குண்டுகளைப் பொழியும் …
முள்ளிவாய்க்கால் மூச்சுத்திணறி அதிர்ந்து துடிக்கும் …

இவை … ” அறம் மீறிய ஆயுதங்கள் ”

சிங்கள இனவாத அரசே !
அன்றும் அறம் மீறி அழித்தீர் …!
இன்றும் அறம் மீறி அழிக்கிறீர் …!
ஆம் … முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை …!
இது இனவெறியின் அதிஉச்சம் …

ஒன்று கூறுகிறோம் …
நீங்கள் அனைவரும் சிறந்த மனநோய் மருத்துவரை நாடுங்கள் …!
இல்லையேல் சிங்கள இனத்தையும் அழித்துவிடுவீர்கள் ….

அகரப்பாவலன்.