வடக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளராக இருந்து காலமான அன்ரனி ஜெகநாதனின் வெற்றிடத்திற்கு, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலிருந்து ஆண்டிஐயா புவனேஸ்வரன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
நியமிக்கப்பட்டுள்ள ஆண்டிஐயா புவனேஸ்வரன் இன்று பிற்பகல் 03 மணிக்கு வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் முன்னிலையில், வடக்கு மாகாண சபையின் உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
கடந்த ஒக்டோபர் மாதம் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த முல்லைத்தீவு மாவட்டத்தைப் பிரிதிநிதித்துவப்படுத்திய வடக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளரின் வெற்றிடத்திற்கு, வடக்கு மாகாண சபைத் தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்தில் அடுத்த விருப்பு வாக்குகளைப் பெற்றுக்கொண்ட ஆண்டி ஐயா புவனேஸ்வரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
43 வயதுடைய ஆண்டிஐயா புவனேஸ்வரன் தமிழ்தேசியக் கூட்டமைப்பில், தமிழீழ விடுதலை இயக்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.
குறித்த சத்தியப்பிரமாண நிகழ்வில், வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான விந்தன் கனகரட்ணம், கேசவன் சயந்தன் ஆகியோர் கலந்து கொண்டார்.