கப்பல்களை விடுவித்தமைக்கு கடற்படைத் தளபதிக்கு பாராட்டுத் தெரிவித்தார் ரணில்!

687 0

ravindra-ranil-1அப்பாந்தோட்டைத் துறைமுகத்தில் துறைமுகத் தொழிலாளர்களால் தடுத்துவைக்கப்பட்டிருந்த கப்பல்களை விடுத்தமைக்கு கடற்படைத் தளபதிக்கு ரணில் விக்கிரமசிங்க பாராட்டுத் தெரிவித்துள்ளதுடன், கப்பல்களை விடுவிப்பதற்கு கடற்படைக்கு உத்தரவிட்டது அரசாங்கமே எனவும் தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டைத் துறைமுகத்தில் துறைமுகத் தொழிலாளர்களால் நான்குநாட்களாகத் தடுத்துவைக்கப்பட்டிருந்த கப்பல்களை சிறீலங்காக் கடற்படையினர் கடந்த சனிக்கிழமையன்று விடுவித்தனர்.

இந்நிலையில் அங்கிருந்த ஊடகவியலாளர்கள் இருவர் தாக்கப்பட்டு, துறைமுக ஊழியர்களும் தாக்கப்பட்டு காயப்படுத்தப்பட்டனர் எனக் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் நேற்றுப் பிற்பகல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்த கடற்படைத் தளபதி அம்பாந்தோட்டைச் சம்பவம் தொடர்பான விளக்க அறிக்கையினை பிரதமரிடம் கையளித்தார்.

இதன்பின் கருத்து வெளியிட்ட சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அம்பாந்தோட்டைத் துறைமுகத்தில் தமது கப்பல்கள் ஆபத்தில் உள்ளதாகவும், அவற்றை விடுவிக்குமாறும் கப்பல் நிறுவனங்கள் தன்னிடம் கேட்டுக்கொண்டதாகவும் தெரிவித்தார்.

துறைமுகத்துக்கு வரும் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்கவேண்டியது எமது பொறுப்பாகும்.

எனவே, இது குறித்து சிறீலங்கா அதிபருக்கும், பாதுகாப்பு அமைச்சருக்கும் தெரியப்படுத்தினேன். அதன்பின்னர் கடற்படையினருக்கு கப்பல்களை பத்திரமாக மீட்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

சர்வதேச விதிமுறைகளுக்கமைய கடற்படைத் தளபதியை அனுப்பி, கப்பலை விடுவிக்கும் பணி நடைபெற்றது.

அம்பாந்தோட்டை துறைமுகத்தில் கடற்படைத் தளபதியால் அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் ஊடகவியலாளர் அனுமதியின்றி எவ்வாறு உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் நுழைந்தார் என்பது குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதன்போது கப்பல்களை பாதுகாப்பாக விடுவிக்க நடவடிக்கை எடுத்த கடற்படைத் தளபதிக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராட்டுக்களைத் தெரிவித்தார்.