இஸ்லாமிய மதம் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து, முஸ்லிம்களுக்கு விரோதமான கருத்துக்களை வெளியிட்டு வரும் பொதுபல சேனா மற்றும் அதன் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தொடர்பில் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம் எழுத்து மூலமான விபரங்களை முன்வைத்துள்ளனர்.
இஸ்லாமியர்கள் நம்பிக்கை கொண்டுள்ள இறைவன் அல்லாவை அவமதிக்கும் வகையிலான கருத்துக்களை பொதுபல சேனா அமைப்பும் அதன் செயலாளரும் வெளியிட்டு வருவதாக முஸ்லிம் பிரதிநிதிகள் தமது கடிதத்தில் கூறியுள்ளனர்.
கடிதத்தில் 21 முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். இவர்களில் பல அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் அடங்குகின்றனர்.
இந்த முஸ்லிம் பிரதிநிதிகள் இதற்கு முன்னர் அளுத்கமவில் நடந்த துரதிஷ்டவசமான சம்பவத்தின் போது, பொதுபல சேனா அமைப்பினர் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு கடிதம் மூலம் விபரமாக தெரியப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.