மஸ்கெலிய வனப்பகுதியில் காணாமற்போயிருந்த ஐவர் மீட்பு

262 0

thumb_large_d0055222மஸ்கெலியா – எமில்டன் வனப்பகுதிக்குள் காணாமல் போயிருந்த ஐவர் பொலிஸார் மற்றும் அதிரடைப் படையினர் இணைந்து நடத்திய தேடுதலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வழித்தவறியே இவர்கள் ஐவரும் காணாமற் போயிருந்ததாகவும், இன்று காலை அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

நேற்று முன்தினம் இரவு முதல் காணாமல் போயிருந்த இவர்களை தேடும் பணியில் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படை உறுப்பினர்களை உள்ளடக்கிய 5 குழுக்கள் ஈடுபட்டிருந்ததாக நல்லத்தண்ணி பொலிஸார் தெரிவித்தனர்.

லக்சபான வாழமலை தோட்ட முகாமையாளரின் உறவினர்கள் நால்வரும்  இவர்களுக்கு வழிகாட்டச் சென்ற லக்சபான எமில்டன் தோட்டத்தில் பணியாற்றும் மா.கிருஷ்ணசாமி ஆகிய ஐவரே இவ்வாறு காணாமற் போயிருந்தனர்.

நேற்று முன்தினம் காலை வனப்பகுதியைச் சுற்றிப்பார்க்கச் சென்ற இவர்கள் அன்றைய தினம் இரவுவரை வீடு திரும்பவில்லை என்பதோடு, அவர்களுடன் எவ்வித தொடர்புகளையும் ஏற்படுத்திகொள்ள முடியாத நிலை ஏற்பட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில்  பொலிஸாரும் அதிரடைப் படையினரும் ஐந்து குழுக்களாக பிரிந்துச் சென்று தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இவர்கள் சிவனொளிபாத மலைக்கு சென்ற பின்னர் எமில்டன் காட்டுக்குச் சென்ற நிலையில் இவர்களுடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது