குருநாகல் மாவட்டத்தில் 16 வயதிலும் குறைந்த சிறுமிகளில் 75 வீதமானோர் துஷ்பிரயோகம்

173 0

குருநாகல் மாவட்டத்தில் இதுவரையில் 16 வயதுக்குக் குறைந்த பெண் பிள்ளைகளில் 75 வீதமானோர் துஷ்பிரயோகத்துக்குள்ளாகியுள்ளமை மிகவும் வேதனைக்குரிய நிலையாக ஆகியுள்ளது. அநேக கஷ்ட பிரதேச செயலகப் பிரிவுகளில் இந்நிலைமையைக் காண முடிவதோடு, அதில் கொடவேஹர, ரஸ்நாயகபுர, பொல்பித்திகம, யாப்பஹூவ, கிரிபாவ போன்ற பிரிவுகளில் இந்நிலையை அதிகளவில் காண முடியும் என நிக்கவரெட்டிய உதவி பொலிஸ் அத்தியட்சர் யூ.டி. அலவத்த தெரிவித்துள்ளார்.

 

கொட்டவேஹர பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற சிவில் பாதுகாப்பு குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய உதவி பொலிஸ் அத்தியட்சர் மேலும் கூறியதாவது,

மாவட்டத்தில் இளம் பெண்கள் துஷ்பிரயோகங்களுக்குள்ளாவதாகக் கிடைக்கும் தகவல்களை விட வெளியில் வராத சம்பவங்கள் அதிகமாகும். பிள்ளைகளை விட்டுவிட்டு பெற்றோர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுச் செல்கின்றமை, இதனால் பாட்டிகளிடத்தில் பிள்ளைகள் வளர்கின்றமையே இவ்வாறான நிலைக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

சில பிள்ளைகள் பல சந்தர்ப்பங்களில் இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகங் களுக்குள்ளாவது தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கின்றன. இவ்வாறான சந்தர்ப்பங்களைக் குறைத்துக் கொள்வதற்கான வேலைத்திட்டங்களை உருவாக்க வேண்டும்.

விசேடமாக 9, 10 ஆம் வகுப்புகளில் கற்பவர்களே அதிகளவில் இவ்வாறு துஷ்பிரயோகங்களுக்குள்ளாகும் பெண் பிள்ளைகள் என இனங்காணப்பட்டுள்ளனர்.

கடந்த மாதத்தில் சிறுமி ஒருவர் பலரால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட சம்பவம் நிக்கவரெட்டிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறான வல்லுறவுச் சம்பவங்களில் சிறுமிகள் அதிகளவில் பாதிக்கப்பட்டிருப்பது பாட்டன், சித்தப்பா அல்லது நெருங்கிய உறவினர்களாலாகும். இது மிகவும் வேதனைக்குரிய நிலையாகும்.

எதிர் காலங்களில் இது தொடர்பில் பாடசாலைகள் உள்ளிட்ட ஏனைய அனைத்துப் பிரிவுகளையும் அறிவுறுத்த வேண்டியுள்ளது. விசேடமாக பிள்ளைகள் தொடர்பில் பெற்றோர் அதிக கவனம் செலுத்த வேண்டிய காலத்தில் வாழ்ந்து கொண்டிருக் கின்றோம் என்றார்.