கல்முனை மாநகர சபையை கலைக்க வேண்டுகோள்

226 0

கல்முனை மாநகர சபையினை உடனடியாக கலைக்க வேண்டுமென, ஆளுநரிடம் வேண்டுகோள் விடுப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் தெரிவித்தார்.

கல்முனை ஊடக மையத்தில் நேற்று (09) இரவு நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துரைக்கையில், “ஹரீஸ் எம்.பியின் அஜன்டாவில் இயங்கும் மேயரின் தன்னிச்சையான போக்குகள் நிறுத்தப்பட வேண்டும்.

“கல்முனை மாநகர சபையின் 12 வட்டாரமான பெரிய பகுதியில் மின் குமிழை கொள்வனவு செய்தும் அதனைப் பொருத்த முடியாமல் இருப்பதாகவும் கல்முனை வாழ்  இளைஞர்கள் அதனை பொருத்துவதற்கு முன்வருமாறு, எனது சக உறுப்பினர் கந்தசாமி சிவலிங்கம் கேட்டுள்ளார். இதற்கு காரணம் பாதீடு தொடர்பில் எம்மால் வாக்களிக்கப்பட்டமை ஆகும்.

“உண்மையில் இந்தப் பாதீட்டுக்கு எதிராக வாக்களித்தமைக்கு முக்கிய காரணம் மேயரின் மீது கொண்ட தனிப்பட்ட குரோதமோ  வெறுப்புக்களோ அல்ல. இந்த வாக்களிப்பின் போது, எமது இளைஞர்கள், பொதுமக்கள் விடுத்த நியாயமான கோரிக்கைகளை ஏற்றுத் தான் பாதீட்டுக்கு எதிராக எமது நியாயமான குறைபாடுகள், வேண்டுகோள்களைக் கூறி வாக்களித்தோம்.

“தற்போது இவ்விடயங்களை வைத்துக்கொண்டு, எமது பகுதிகளில் இடம்பெறும் திண்மக்கழிவுகள் தொடர்பான பிரச்சினை மற்றும் மின் விளக்குகள் ஒளிராமை தொடர்பில் எழுப்பிய கேள்விகளுக்கு மேயரால் எவ்விதப் பதிலும் கிடைப்பதில்லை.

“சபையில் குறைகளை சுட்டிகாட்டி கதைக்கின்ற போது, பிழையானவர்களாக எம்மை அடையாளப்படுத்துகின்றனர். இவ்வாறாக மாநகர சபை இயங்குவதால் எந்தவித பயனும் இல்லை.

“எனவே, இந்த மாநகர சபையை கலைக்குமாறு, ஆளுநர் மற்றும் ஜனாதிபதியைக் கேட்டுக்கொள்கின்றோம். இந்தப் பாரபட்சம் தொடருமாயின் இன ரீதியான பிரச்சினை தொடர வாய்ப்பு ஏற்படும்” என்றார்.