காத்தான்குடியில் சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்ட பகுதி மீள முடக்கப்பட்டது

177 0

மட்டக்களப்பு- காத்தான்குடியில் சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்ட பகுதியை தேசிய கொவிட்-19 செயலணியின் முடிவு வரும்வரை, உடன் மூடுமாறு மாவட்ட செயலணியில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காத்தான்குடியில் சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்ட 7 கிராம சேவகர் பிரிவையும் தேசிய கொவிட் 19 செயலணியில் இருந்து அறிவித்தல் வரும்வரை உடனடியாக மூடுவதாக  நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மட்டக்களப்பு மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியினால் தீர்மானிக்கப்பட்டு, முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று அதிகரித்ததன் காரணமாக காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவு, கடந்த டிசம்பர் 31ஆம் திகதி தனிமைப்படுத்தப்பட்டு முடக்கப்பட்டது. பின்னர் 7 கிராம சேவகர் பிரிவு விடுவிக்கப்பட்டது. ஆனால்  10 கிராம சேவகர் பிரிவில்  தனிமைப்படுத்தல் தொடர்ந்து அமுலில் இருந்தது.

இந்நிலையில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் காத்தான்குடி நகரசபை தவிசாளர் தன்னிச்சையாக தீர்மானித்து, கொவிட் சட்டத்திற்கு முரணாக 7 கிராமசேவகர் பிரிவை நேற்று விடுவிப்பதாக அறித்துள்ளனர்.

இதனையடுத்து எற்பட்ட முறைப்பாடுகளின் பிரகாரம் குறித்த பகுதிக்கு மாவட்ட அரசாங்க அதிபர், மாவட்ட உதவி பொலிஸ்மா அதிபர்,  இராணுவத்தினர், சுகாதார அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்ட பின்னர் மாவட்ட கொரோனா தடுப்பு செயலணி அவசரமாக மாவட்ட செயலகத்தில் கூட்டப்பட்டு ஆராயப்பட்டது

அதில் எந்த பகுதியை தனிமைப்படுத்துவது அல்லது விடுவிப்பது தொடர்பாக மாவட்ட செயலணிக்குழு கொவிட் 19 தேசிய செயலணிக்கு பரிந்துரைக்க முடியும். அதற்கான முடிவுகள் பிரகாரம் நாங்கள் அதனை அமுல்படுத்த முடியும். இருந்தபோதும் தன்னிச்சையாக எவரும் முடிவு எடுக்கமுடியாது.

எனவே தன்னிச்சையாக விடுவிக்கப்பட்ட 7 கிராம சேவகர் பிரிவும் கொவிட் 19 தேசிய செயலணியில் இருந்து அறிவித்தல் வரும் வரை உடனடியாக முடக்கப்படும் என மாவட்ட செயலணியில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனவே கொவிட் -19 சட்ட விதிமுறைகளுக்கு எதிராக விடுவிக்கப்பட்ட காத்தான்குடி 7 கிராம சேவகர் பிரிவும் உடனடியாக முடக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.