ஜெயா விட்டு சென்று இடத்தில் இருந்து ஓ. பன்னீர்செல்வமும், ஸ்டாலினும் இலங்கைக்கு அழுத்தங்களை கொடுக்க வேண்டும்.

292 0

44994_siva-okமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா விட்டு சென்று இடத்தில் இருந்து தமிழகத்தின் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வமும் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினும் இலங்கைக்கு தொடர்ந்தும் அழுத்தங்களை கொடுக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் நேற்று யாழ்ப்பாணத்தில் வைத்து இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.

ஜெயலலிதாவை பொறுத்தவரை, இலங்கை தமிழர் விடயத்தில் புதுடில்லிக்கு அவர் அழுத்தங்களை கொடுத்து வந்தார்.

அத்துடன் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் சந்திக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அவர் தொடர்ந்தும் நடவடிக்கைகளை எடுத்து வந்தார் என்றும் சிவாஜிலிங்கம் குறிப்பிட்டார்.

எந்தச் சூழ்நிலையிலும், இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்தவர் ஜெயலலிதா.

இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை இலங்கை அரசு எடுத்த போதெல்லாம், அதற்கு எதிராக குரல் கொடுக்கவும் அவர் என்றும் தயங்கியதில்லை.

தமிழ் மக்களின் நலனுக்காக, இந்திய அரசு மூலம் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கவும் ஜெயலலிதா தவறியதில்லை.

இந்த நிலையில், ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து, தமிழகத்தின் புதிய முதல்வராக பதவியேற்றுள்ள ஓ.பன்னீர்செல்வமும், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினும் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவான ஜெயலலிதாவின் நிலைப்பாட்டை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும் எனவும் சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.