விசாரணை குழுவின் கால எல்லை நீடிப்பு – வடக்கு மாகாண சபை

285 0

northern-provincil-councial-66547வடக்கு மாகாண சபையின் அமைச்சர்களை விசாரணை செய்வதற்கு முதலமைச்சரால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவின் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண சபையின் 67வதுஅமர்வு இன்று அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்றது.

இதன் போதே முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இதனை தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண சபையின் அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை செய்யுமாறு வடக்கு மாகாண சபையின் உறுப்பினர்கள் கோரியிருந்தனர்.

இந்த கோரிக்கையை அடுத்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழு ஒன்று முதலமைச்சரினால் நியமிக்கப்பட்டது.

இந்த குழு கடந்த மாதகாலமாக செயற்பட்டு வந்த நிலையில், நேற்றைய தினம் அந்த விசாரணைக்குழுவின் கால எல்லை நிறைவடைந்துள்ளது.

இந்தநிலையில் இன்றைய தினம்; நடைபெற்ற வடக்கு மாகாண சபையின் அமர்வில் உறுப்பினர் லிங்கநாதன் குறித்த விசாரனைக்குழுவின் காலத்தை நீடிக்க வேண்டும் என கோரிக்கை ஒன்றை முன்வைத்தார்.

இதன்போது உரையாற்றிய வடக்கு மாகாண முதலமைச்சர், குறித்த விசாரணைக்குழுவில் இதுவரை ஐந்து முறைப்பாடுகளே பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

இந்தநிலையில், நேற்று முதல் முடிவடையும் விசாரணைக்குழுவின் காலத்தை மேலும் ஒரு வார காலத்திற்கு நீடிப்பதற்கு எந்த தடையும் இல்லை என அறிவித்தார்.

மேலும் அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் ஏதும் இருப்பின் அது தொடர்பில் பிரதம செயலாளரின் அலுவலகத்தில் இயங்கும் விசாரனைக்குமுவிடம் முறையிட முடியும் என்றும் வட மாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.