இலங்கை மத்திய வங்கி வௌியிட்டுள்ள அறிவிப்பு

258 0
இலங்கை மத்திய வங்கி தளர்த்தப்பட்ட நாணயக் கொள்கை நிலையினைத் தொடர்ந்தும் பேணுகின்றது

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது, 2020 நவம்பர் மாதம் 25ஆம் திகதி நடைபெற்ற அதன் கூட்டத்தில், மத்திய வங்கியின் துணை நில் வைப்பு வசதி வீதத்தினையும் துணை நில் கடன் வழங்கல் வசதி வீதத்தினையும் முறையே 4.50 சதவீதம் மற்றும் 5.50 சதவீதம் கொண்ட அவற்றின் தற்போதைய மட்டங்களில் பேணுவதற்கு தீர்மானித்துள்ளது.

பேரண்ட பொருளாதார நிலைமைகளையும் உள்நாட்டு மற்றும் உலகளாவிய பக்கங்களில் எதிர்பார்க்கப்பட்ட அபிவிருத்திகளையும் கவனமாக பரிசீலித்ததன் பின்னர் சபை இத்தீர்மானத்தை மேற்கொண்டது.

இதுவரையான ஆண்டு காலப்பகுதியில் ஒட்டுமொத்த சந்தை கடன் வழங்கல் வீதங்களில் வீழ்ச்சியினை அவதானித்து, சபையானது கேள்வியினால் தூண்டப்பட்ட பணவீக்க அழுத்தங்கள் இன்மையில் குறிப்பாக உள்நாட்டு பணச் சந்தையில் நிலவுகின்ற குறிப்பிடத்தக்க மிகையான திரவத்தன்மை மட்டங்களைக் கருத்திற்கொண்டு, பொருளாதார வளர்ச்சிக்கு உந்துதலளிப்பதற்கு கடன் வழங்கல் வீதங்களில் தொடர்ச்சியான கீழ்நோக்கிய திருத்தமொன்றிற்கான தேவையினை வலியுறுத்தியது.

பொருளாதார மீட்சியடைதலுக்கு ஆதரவளிக்கும் பொருட்டு சபையானது சம்பளம் பெறுகின்ற பணியாளர்களுக்கென ஈடு பிணையாகக் கொண்ட வீடமைப்புக் கடன்கள் மீது உயர்ந்தபட்ச வட்டி வீதங்களை அறிமுகப்படுத்துவதற்குத் தீர்மானித்த அதேவேளை அண்மைய எதிர்காலத்தில் பொருளாதாரத்தின் தெரிவுசெய்யப்பட்ட துறைகளுக்கென கடன்வழங்கல் இலக்குகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.