முன்னணி முள்ளிவாய்க்காலில் உறுதிமொழி!!

455 0

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் இன்று சனிக்கிழமை காலை முள்ளிவாய்க்காலில் தமது பாராளுமன்ற பிரவேசத்திற்கான உறுதிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.அக் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் தலைமையிலான அணியினரே இவ்வாறுஉறுதிமொழி செய்துள்ளனர்.

உறுதிமொழி

உள்ளக வெளியக சவால்களை சந்தித்த பின்னும் தமிழ்த் தேசியப் போராட்டம் நீட்சி பெற்றுள்ளது. காலநீட்சியில் படிமுறை ரீதியாக மாற்றங்களை கண்டபோதும் இலக்கு மாறமால், புதிய பரிமாணத்தோடு எமது இலட்சியப் போராட்டம் தொடர்கிறது. அதன் சாட்சியாக இங்கே அணிதிரண்டு நாங்கள் நிற்கின்றோம்.
வரலாறு வழிகாட்ட, காலத்தின் கட்டளைக்கு ஏற்ப வரலாற்றுப் பொறுப்பை சுமந்துள்ள நாம், ‘தேச நிர்மாணிப்பாளர்களாக’ நிலைமாற்றம் அடைய கடந்த கால தியாகங்களை மனதிலிருத்தி உறுதிகொள்கிறோம். ஆத்மார்த்த ரீதியாக எம்மை எமது போராட்டத்தோடு இணைத்து, எமது விடுதலைக்கான போராட்டம் சந்தித்துள்ள தடைகளை தகர்த்து, தமிழ்த் தேசத்தின் இறைமையையும் சுதந்திரத்தையும் மீட்க தொடர்ந்தும் அர்ப்பணிப்போடு போராடுவோம் என உறுதிகொள்கிறோம்.

சுதந்திர வேட்கையையும் இலட்சிய தாகத்தையும் எங்களுடைய சந்ததிக்கு எடுத்து செல்வதற்கு திடம்கொள்வதோடு, எமக்கு தரப்பட்ட பணிகளை, எத்தடை வரினும் முறியடித்து முன்னகர்த்த உறுதிகொள்கிறோம்.