மணிவண்ணன் குறித்த முடிவை அவருக்கு மின்னஞ்சலில் அனுப்பியுள்ளோம்

356 0

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்தும், பேச்சாளர் பதவியிலிருந்தும் மணிவண்ணனை நீக்கும் முடிவை மின்னஞ்சலில் அனுப்பியுள்ளோம். இன்று அவருக்கு பதிவு தபாலில் அனுப்பி வைப்போம். அதை படித்து விட்டு அவர் தனது நிலைப்பாட்டை அறிவித்த பின்னர், மேலதிகமாக எமது நிலைப்பாட்டை தெரிவிப்போம் என தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகியுள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் இன்று காலை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் அஞ்சலி செலுத்தினர். பின்னர் ஊடகவியலாளர்களிடம் பேசியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மத்திய குழு கூடி ஒரு சில முடிவுகள் எடுக்கப்பட்டன. விசேடமாக மணிவண்ணன் தொடர்பாக பேசி சில முடிவுகள் எடுக்கப்பட்டன. அந்த முடிவுகளை நாங்கள் நேற்று இரவு எழுத்துமூலமாக மணிவண்ணனிற்கு மின்னஞ்சல் ஊடாக அனுப்பப்பட்டது. அந்த அறிவித்தல் பதிவு தபாலில் இன்று அனுப்பி வைக்கப்படும். அதை படித்து விட்டு அவர் தனது நிலைப்பாட்டை அறிவித்த பின்னர், மேலதிகமாக எமது நிலைப்பாட்டை தெரிவிப்போம் என்றார்.