நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய உற்சவம் சுகாதார விதிமுறைகளுக்கு அமைய நடைபெறுகிறது – மகேசன்

225 0

யாழ்ப்பாணம் – நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய உற்சவம் மட்டுப்படுத்தப்பட்ட பக்கதர்களோடு, சுகாதார விதிமுறைகளுக்கு அமைய நடைபெற்று வருவதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தில் பூசை வழிபாடுகளில் கலந்து கொண்டபின் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கடந்த 20 ஆம் திகதியிலிருந்து உலக பிரசித்திபெற்ற நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களுடன் இடம்பெற்று வருகின்றது.

ஆரம்பத்தில் நாட்டில் உள்ள சுகாதார நிலைமையினை கருத்தில் கொண்டு மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களை கொண்டு குறித்த ஆலய உற்சவத்தின் இந்த வருடம் நடத்துவது என நாம் தீர்மானித்திருந்தோம்.

எனினும் தற்பொழுது அந்த நடைமுறையில் சற்று தளர்வு ஏற்பட்டு ள்ளது. எனவே எதிர்காலத்திலும் குறித்த நடைமுறையில் மாற்றம் ஏற்படக் கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கின்றன.

எனவே ஆலயத்திற்கு வரும் அடியவர்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி ஆலய உற்சவத்தில் பங்கு பெறுமாறு கேட்டுக் கொண்ட யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், நயினாதீவானது ஒரு தனியான தீவாக காணப்படுவதனால் வெளிமாவட்டங்களில் இருந்து குறித்த பகுதிக்கு வருகை தருவோரால் அந்தப் பகுதியில் சுகாதார நடைமுறைகளை பேணுவதில் உள்ள சிக்கல் நிலைமை காரணமாகவே மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் எனவும் தெரிவித்தார்.